சுற்றுலா சென்ற பெண்ணிடம் சில்மிஷம்! திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஸ்பெண்ட்!
சென்னை: கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனி ராஜா அவர் வகித்த பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், கொடைக்கானல் ஹோட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கத் தலைவராகவும் இருப்பவர் அப்துல் கனி ராஜா.

50 வயது மதிக்கத்தக்க இந்த ஆசாமி, கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்த பெண்ணிடம் கடந்த 10ஆம் தேதி அத்துமீறலில் ஈடுபட முயன்றதால் இப்போது சிறையில் உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தவறு செய்ததற்கான முகாந்திரம் இருந்ததால் அப்துல் கனி ராஜாவை கைது செய்தனர்.
கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர் என்கிற போதும் தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கட்டும் என திமுக தரப்பிலிருந்து இந்த விவகாரத்தில் யாரும் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே,எஸ்.அழகிரி, அப்துல் கனிராஜா மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பிலிருந்து திரு. எஸ். அப்துல்கனி ராஜா அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களின் அறிவுறுத்தலின்படி தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுகிறார்.
தம் மீதான நடவடிக்கை குறித்து உரிய விளக்கத்தை 7 நாட்களுக்குள் காங்கிரஸ் தலைமைக்கு அவர் தெரிவிக்க வேண்டும்.'' இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளர்.












Click it and Unblock the Notifications