திருமாவை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்! ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக சாடிய இயக்குநர் அமீர்
சென்னை: மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன், மக்களிடம் பிரசாரம் செய்ய போகிறேன் என்கிறார். என்ன கொடுமை சார் இது. திருமாவளவனை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்களை எதிர்த்து களம் ஆட வேண்டிய நேரம் இது'' என்று ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக இயக்குநர் அமீர் சாடியுள்ளார்.
சென்னையில் ‛‛எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்'' நூல் வெளியீட்டு விழா நடந்தது. அழைப்பு விடுத்தும் இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்கவில்லை.

அதேவேளையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதில் ஆதவ் அர்ஜுனா திமுகவின் பெயரை கூறாமல் கடுமையாக விமர்சனம் செய்தார். ‛‛பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக் கூடாது. மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது. மன்னராட்சியை கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள். கொள்கைகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்து ஊழலை செய்யக்கூடிய நிலை இருக்க கூடாது.
தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவெடுத்துவிட்டார்கள். 2026ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும். பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர் தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்'' என்று திமுகவை விளாசியிருந்தார்.
இதையடுத்து நேற்று ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தொல் திருமாவளவன் பிறப்பித்தார். இந்நிலையில் தான் இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் மீண்டும் ஆதவ் அர்ஜுனாவை விமர்சனம் செய்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் பெயரை குறிப்பிடாமல் அவர் வைத்துள்ள ஸ்டேட்டஸில், ‛‛மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன், மக்களிடம் பிரசாரம் செய்ய போகிறேன் என்கிறார். என்ன கொடுமை சார் இது. விடுதலை சிறுத்தைகளை வலிமை இழக்க செய்து திருமாவளவனை தனிமைப்படுத்த முயற்சி. திருமாவளவனை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்களை எதிர்த்து களம் ஆட வேண்டிய நேரம் இது'' என தெரிவித்துள்ளார்.
அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்!' என வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் திமுகவின் வெற்றிக்காக களஆய்வு மேற்கொண்டது, பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தது தொடர்பான விபரங்களுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தொடர்ந்து தான் இயக்குநர் அமீர் பெயரை குறிப்பிடாமல் ஆதவ் அர்ஜுனை விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் ஆதவ் அர்ஜுனை, இயக்குநர் அமீர் விமர்சனம் செய்வது முதல் முறையல்ல. ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதுதொடர்பாக நேற்று விஜய்க்கு அறிவுரை கூறும் வகையில் அமீர், ஆதவ் அர்ஜுனை சாடியிருந்தார். அதாவது, ‛‛ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய் அரசியலுக்கு நல்லதல்ல. செல்வந்தர்களின் திடீர் அரசியல் என்றைக்குமே நன்மை தராது" என்று அமீர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதன்படி தற்போது 2வது முறையாக ஆதவ் அர்ஜுனை, அமீர் தாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications