போர் மனித தன்மையற்றது.. பாகிஸ்தானே பாவப்பட்ட நிலையில்தான் இருக்கு.. இயக்குநர் ஞானவேல் கருத்து
சென்னை: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை விமர்சித்துள்ள திரைப்பட இயக்குநர் ஞானவேல், "சுற்றுலா தலம் பாதுகாப்பு இல்லை என்பது கொடூரம்தான். இருப்பினும் போர் மனித தன்மையற்றது" என்று கூறியுள்ளார்.
தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், போர் வேண்டாம் என்று பிரபல இயக்குநர் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றிருந்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த இயக்குநர் ஞானவேல், போர் பற்றி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
அவர் பேசியதாவது, "இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் போர் என்பது அடிப்படை மனித தன்மையற்றது. இப்போது கூட நம் கண் முன்னே அது நடந்து கொண்டிருக்கிறது. இது என்ன அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று தெரியாது. போரில் அடிப்படை அறம் இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் இதுபற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், ஆடு, மாடுகளை அப்புறப்படுத்திவிட்டுதான் போரை அறிவிக்க வேண்டும்.
ஆனால் இன்று பாருங்கள் சுற்றுலா தலம் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இது மிகக் கொடூரமானது எனில், இதைவிட தொண்டையை அடைக்கும் துயரம் என்னவெனில், மருத்துவத்திற்காக இந்தியா வந்த பாகிஸ்தானிய குழந்தையை 48 மணி நேரத்தில் இங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதுதான். ஒரு விளைவு இன்னொரு விளைவை ஏற்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.
தான் பத்திரிகையாளராக இருந்த காலத்தில் போர் பற்றிய செய்திகளை கொடுத்த நினைவுகளை பகிர்ந்துள்ள ஞானவேல், 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் நகைச்சுவையாக உருவாக்கப்டப்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தற்போது திரை பிரபலங்கள் போர் பற்றி வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். முன்னதாக நேற்று ஹைதராபாத்தில் நடந்த 'ரெட்ரோ' திரைப்பட விழாவில் பேசியிருந்த பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா,
"காஷ்மீரில் தாக்குதல் நடந்த சம்பவம் பற்றி நான் சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, இதுபோன்ற தாக்குதல்களால் நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்? என்பதை விளக்க வேண்டும்.
காஷ்மீர் இந்தியாவுடையதுதான். காஷ்மீரிகள் நம் நாட்டை சேர்ந்தவர்கள்தான். இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் குஷி என்ற திரைப்படத்திற்காக காஷ்மீர் சென்றிருந்தேன். அங்குள்ள மக்களுடைய நினைவு எனக்கு இனிமையானதாக இருக்கிறது.
ஆனால் பாகிஸ்தானில் கரண்ட் இல்லை. தண்ணீர் இல்லை. இப்போதிருக்கும் சூழலில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டியதில்லை. அந்நாட்டு மக்களுக்கே அரசு மீது வெறுப்பு ஏற்பட்டு அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவார்கள். நாம் ஒற்றுமையாக இருப்போம்" என்று பேசியிருந்தார்.
இப்படி தொடர்ந்து போருக்கு எதிரான குரல்கள் திரைத்துறையில் இருந்து வந்திருக்கிறது. ஆனால், 26 சுற்றுலா பயணிகளை பலி கொண்ட தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications