அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் பண்ணுங்க.. “குறுக்கு வழி”.. கலவரம் ஏற்படுத்த திட்டம்.. பரபர புகார்!
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தகுதி நீக்கம் செய்து தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேசிய முன்னேற்றக் கழகத் தலைவர் சிவா தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வன்முறை, கலவரத்தை ஏற்படுத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என குறுக்கு வழியில் அதிமுக மாஜி அமைச்சர்கள் செயல்பட தொடங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு கட்சிகளும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பணப்பட்டுவாடா, தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை அளித்து வருகின்றனர்.

அதிமுக - பாஜக புகார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமைச்சர்கள் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்புழக்கம் அதிகம் உள்ளதாகவும் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் செயல்களில் திமுக ஈடுபடுவதாகவும் பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

திமுக மீது புகார்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் சட்டவிரோத செயலை தடுக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில், அதன் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுக வேட்பாளருக்கு எதிராக
இந்நிலையில், அதிமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக்கோரி தேசிய முன்னேற்றக் கழக தலைவர் சிவா தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக மாஜி அமைச்சர்கள் தங்கியுள்ள இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அன்பளிப்புகளை குவித்து வைத்துள்ளனர்.

கலவரத்தை ஏற்படுத்த திட்டம்
அதுமட்டுமின்றி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 40 ஆயிரம் பேர் போலி வாக்காளர்கள் என மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என தெரிந்து கொண்டு குறிப்பிட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள் போலியானவர்கள் என தவறான குற்றச்சாட்டை சி.வி.சண்முகம் கூறி வருகிறார். அதே போன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் வன்முறை, கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தென்னரசுவை தகுதி நீக்கம் செய்யுங்கள்
இப்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென குறுக்கு வழியில் அதிமுக மாஜி அமைச்சர்கள் செயல்பட தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே தேர்தல் ஆணையத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை தகுதி நீக்கம் செய்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் ஆவண செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications