ஸ்டாலின், எடப்பாடி கொடுத்த ஆஃபர்.. திமுக பக்கம் சாய்கிறதா தேமுதிக? பிரேமலதா எடுத்த முடிவு!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் தேமுதிக முதல்முறையாக திமுக கூட்டணியில் இணையும் சூழல் கனிந்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். கடந்த 2 சட்டசபைத் தேர்தலிலும் தேமுதிகவில் இருந்து எம்எல்ஏ-க்கள் உருவாகாததால், பிரேமலதா விஜயகாந்த் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு இன்னும் 1 மாதத்தில் வெளியாகவிருக்கும் சூழலில், திமுக மற்றும் அதிமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துவிட்ட சூழலில், அடுத்ததாக தேமுதிகவும் இணையும் என்று கருதப்பட்டது. அதற்கேற்ப கடலூர் மாநாட்டில் தேமுதிகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்த மாநாட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி முடிவை அறிவிக்கப் போவதாக கூறி இருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியின் கூட்டணி முடிவை அறிவிக்காத போது, நாம் மட்டும் ஏன் முந்திரிக் கொட்டை போல் அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று அவராகவே கேள்வி எழுப்பிக் கொண்டு, முடிவை ஒத்தி வைத்தார்.
அதேபோல் தேமுதிக மாநாட்டில் பேசிய விஜயபிரபாகரன் காங்கிரஸ் கட்சியை மட்டுமே விமர்சித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சிக்கவில்லை. இதனால் தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையும் என்ற கேள்வி விவாதமாகி இருக்கிறது. அதேபோல் இரு கட்சிகளிடமும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்பில் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க முன் வந்துள்ளனர். ஆனால் திமுக தரப்பில் ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை கட்சித் தலைமை தெளிவாக கூறிவிட்டது. அதேபோல் அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலின் போதே தேமுதிக கூட்டணி அமைத்தது. பாமக வெளியேறிய போதும், தேமுதிக எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தது.
அந்த நம்பிக்கை காரணமாகவே எடப்பாடி பழனிசாமி இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ராஜ்ய சபா சீட் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் தேமுதிகவுக்கு உறுதி கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் விஜயபிரபாகரன் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார் என்றும் அக்கட்சியின் கூறுகின்றனர்.
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணி பக்கம் செல்லலாம் என்ற யோசனையில் இருக்கிறார். ஏனென்றால் கடந்த 2 சட்டசபைத் தேர்தலிலும் தேமுதிகவால் ஒரு எம்எல்ஏவை கூட உருவாக்க முடியவில்லை. இதனால் திமுக பக்கம் சென்றால் நிச்சயம் சில எம்எல்ஏ-க்களை உறுதியாக பெற முடியும் என்று பிரேமலதா நம்புவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications