தேமுதிக விரைவில் நல்ல கூட்டணியில் இடம்பெறும்.. அரசியலில் எதுவும் மாறலாம்.. பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஒரு அம்மாவாக தேமுதிகவுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், என்டிஏ கூட்டணி உட்பட எதுவும் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், நேற்று என்டிஏ கூட்டணியின் முதல் பிரச்சாரக் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், பாரிவேந்தர், பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கவில்லை. லோக்சபா தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்தவர் பிரேமலதா விஜயகாந்த். ஆனால் ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் இடையில் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் கூட்டணியில் இணைவதற்கான டிமாண்ட்டை அதிகரித்துள்ளார்.
எப்படியாவது தேமுதிகவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வைக்க வேண்டும் என்ற பாஜக, அதிமுகவின் கடைசி நேர முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் திமுக கூட்டணி பக்கம் தேமுதிக சாய்கிறதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. தேமுதிக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே திமுகவுடன் கூட்டணி வைத்ததே இல்லை. ஆனால் இம்முறை திமுக கூட்டணியில் இடம்பெறுவதற்கான சிக்னலை தேமுதிக காட்டி வருகிறது.
அதேபோல் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.
யாரும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தேமுதிக எங்களின் குழந்தை.. அதனால் ஒரு அம்மாவாக தேமுதிகவுக்கு என்ன செய்ய வேண்டுமென நன்றாக தெரியும்.. உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுத்து கூட்டணியை அமைப்போம். எந்த ரகசியமும் கிடையாது.
இம்முறை வெளிப்படையாகவே கூட்டணி பேச்சுவார்த்தையை செய்கிறோம். என்டிஏ கூட்டணி உட்பட இன்னும் எந்த கூட்டணியும் முழு வடிவம் பெறவில்லை. அங்கும் இன்னும் சில கட்சிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். நல்லதே நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications