தேமுதிக மாநாட்டில் பிரேமலதா பேசிக் கொண்டிருந்தபோதே சோகம்.. கூட்டத்தில் மயங்கி விழுந்த நிர்வாகி பலி!
சென்னை: நேற்று கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தேமுதிக நிர்வாகி செல்வராஜ் என்பவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், செல்வராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தேமுதிக மாநாட்டுக்கு வந்த கட்சி நிர்வாகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், வரும் மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தேமுதிக இதுவரை கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று (ஜனவரி 10) தேமுதிக உரிமை மீட்பு மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், மாநாட்டு திடலுக்கு வந்த பிரேமலதா விஜயகாந்துக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்குவது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் பேசிய பிரேமலதா, "நூறு ரூபாய் பணம், பீர், சோறு வழங்கினால்தான் மற்ற கட்சிகளின் தொண்டர்கள் அந்தக் கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார்கள். ஆனால் தே.மு.தி.க அப்படி இல்லை. சொந்தப் பணத்தைப் போட்டு, அவர்களாகவே சாப்பாடு செய்து, நம் குடும்ப விழாவுக்கு வந்திருக்கிறார்கள். விஜயகாந்த் என்ற பெயருக்காகக் கூடிய கூட்டம் இது. நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கியது இந்தக் கடலூர் மண்.
தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தே.மு.தி.க தொண்டர்கள்தான் முடிவெடுப்பார்கள். அதன்படி நீங்கள் யாருடன் கூட்டணி என்று சொல்கிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி. கேப்டன் தொண்டர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் கூட்டணி பேசமாட்டேன். தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாம் கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி பெறும். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று தே.மு.தி.க-தான் முடிவு செய்யும்." எனப் பேசினார்.
நேற்று இரவு 9 மணியளவில் தேமுதிக மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தேமுதிக நிர்வாகி செல்வராஜ் என்பவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரைத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் தாவாடநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். தேமுதிக கிளை செயலாளரான இவர், கடலூரில் நேற்று நடந்த மாநாட்டில் கலந்து கொண்டார். மேடையில் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது செல்வராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், செல்வராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தேமுதிக மாநாட்டுக்கு வந்த கட்சி நிர்வாகி பலியான சம்பவம் கட்சியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications