கேப்டன் உருவத்தை பயன்படுத்தாதீங்க! அறிக்கை விட்ட பிரேமலதா விஜயகாந்த்! ‘தி கோட்’ படத்துக்கு சிக்கல்?
சென்னை: திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை பயன்படுத்த இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், அனுமதியின்றி இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் நடிக்கும் 68வது படத்துக்கு தி கிரேட் டெஸ்ட் ஆப் ஆல் டைம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் ஒன்று கூடியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே 'தி கோட்' படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது. இதனை பிரேமலதா விஜயகாந்தும் உறுதி செய்திருந்தார்.
இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு ஐந்து, ஆறு முறை எங்கள் வீட்டுக்கு வந்து இதுகுறித்து பேசினார். அதற்கு முன்பே என் மகன் சண்முகபாண்டியனிடமும் இது குறித்து அவர் பேசியிருந்தார். என்னையும் சந்தித்த வெங்கட் பிரபு, 'தி கோட்' திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். உனக்கும் விஜய்க்கும் என்னால் 'நோ' சொல்ல முடியாது என்று வெங்கட் பிரபுவிடம் கூறினேன்" இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
இந்நிலையில் திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் கேப்டன் விஜயகாந்தின் உருவத்தை பயன்படுத்த இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது.
எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரேமலதா சொன்னது 'தி கோட்' படத்தைக் குறிப்பிட்டு இல்லை என கூறுகின்றனர் தி கோட் படக் குழுவினர். இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, தி கோட் படத்தில் விஜயகாந்த் போர்ஷன் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன், விஜயகாந்தின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் நடந்து வருகிறது. அதில் எந்த சிக்கலும் இல்லை என கூறினார்.
இதனிடையே 'ஊமை விழிகள்' இயக்குனர் ஆபவாணனின் பேச்சை தொடர்ந்தே இந்த அறிக்கை என்கின்றனர் திரைத்துறையினர். கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் ஆபவாணன், 'மூங்கில் கோட்டை' என்ற படத்திற்காக விஜயகாந்த் நடித்த சுமார் 70 ஆயிரம் ஃபூட்டேஜ்கள் எங்களிடம் உள்ளன. அந்தக் காட்சிகளை வைத்து தற்போது இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த இரண்டு படங்களில் நடிகர் விஜயகாந்த்தை உயிருடன் திரையில் நடமாட விடுவோம்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications