ஒரு சூரியன்; ஒரு சந்திரன்! யாருக்கும் யாரும் நிகரல்ல! இளையராஜாவை காயப்படுத்தாதீர் -விஜயகாந்த்
சென்னை: இளையராஜாவை அவர் கூறிய கருத்துக்காக யாரும் காயப்படுத்த வேண்டாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த உலகில் யாருக்கும் யாரும் நிகரல்ல என்றும் ஒரு சூரியன், ஒரு சந்திரன் தான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சாதாரண குடும்பத்தில்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

ஒப்பிட முடியாது.
அண்ணல் அம்பேத்கர், பிரதமர் நரேந்திர மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றைக்கும் அவரவர்கள் துறையில் அனைவருக்கும் எடுத்து காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதேபோலதான் இங்கு யாரையும் யாருடன் ஒப்பிட்டு பேச முடியாது.

பெருந்தன்மை குணம்
அவர்களுக்கு நிகர் அவர்கள்தான். இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏற்றுக் கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது. இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகள்
இளையராஜா விவகாரத்தில் இதுவரை திமுக தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் தான் அதிமுக தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேமுதிக தரப்பிலிருந்து இளையராஜா விவகாரத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications