செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கை கைது செய்ய வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் பாய்ச்சல்!
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியையும், அவரது தம்பி அசோக்கையும் கைது செய்ய வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சோதனை நடத்தச் சென்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய நிகழ்வை இதுவரை தாம் கண்டதில்லை என்றும் அதிகாரிகளை கடமையாற்ற விடாமல் தடுப்பது தவறான முன்னுதாரணம் எனவும் சாடினார். விஏஓ கொலை, வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல், ரெய்டுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல் என்பது தான் திராவிடல் மாடல் அரசின் சாதனைகள் என விமர்சித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட சிங்கப்பூர் -ஜப்பான் சுற்றுப்பயணத்தின் பயனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பியதும் சுற்றுப்பயணம் வெற்றி என முதல்வர் பேட்டி கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் வினவினார்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறி வரும் நிலையில், கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலின் தான் அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்டினால் டெல்டா பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.

தமிழ்நாட்டில் கொலை கொள்ளை அதிகரித்திருப்பதாகவும் திமுக எம்.பி.க்களால் தமிழ்நாட்டிற்கு என்ன பலன் கிடைத்தது எனவும் பிரேமலதா விஜயகாந்த் வினவினார். விஜயகாந்த்தை பொறுத்தவரை திருவண்ணாமலை கோயில் முன்பு கூறுகிறேன் நலமுடன் இருக்கிறார் என்றும் நடப்பதிலும், பேசுவதிலும் மட்டுமே அவருக்கு சிரமம் இருப்பதாக தெரிவித்தார்.
விஜயகாந்துக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் மக்களை சந்திப்பார் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். திருவண்ணாமலை கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.












Click it and Unblock the Notifications