Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்.. உள்ளே வரும் ஆம் ஆத்மி? காங்கிரஸுக்கு பதிலா தேசிய அரசியல் கணக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் ஏற்கனவே 21 கட்சிகள் இருக்கும் நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக, ஆம் ஆத்மி கட்சியுடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது திமுக குழு. அதைத்தொடர்ந்து பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் வசீகரன், திமுக இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தரும் எனக் கூறியுள்ளார். திமுகவின் இந்த கணக்கு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுகள் உச்சகட்டத்தை எட்டி உள்ளன. ஏராளமான கூட்டணி கட்சிகள் இருக்கும் நிலையில், ஒவ்வொன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது திமுக குழு.

tamil nadu assembly election 2026

இந்நிலையில், திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் தமிழக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வசீகரன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் சீட் பேரத்தில் முரண்டு பிடித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியை அழைத்து திமுக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வசீகரன், "சர்வாதிகார மோடியின் ஆட்சியைத் தடுக்கக்கூடிய ஆற்றல் திமுகவுக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடியின் ஆட்சியால் பாதிக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி. ஆதாரமே இல்லாமல் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்தார்கள்.

ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. தமிழக மக்களையும் ஏமாற்றிவிடலாம் என பாஜக நினைக்கிறது. பாஜகவை தமிழகத்தில் கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம்.

அரவிந்த் கெஜ்ரிவால், கட்சி பெரிதா? நாடு பெரிதா? என்றபோது நாடுதான் பெரிது என முடிவெடுத்து கெஜ்ரிவால் இந்தியா கூட்டணியில் இணைந்தார். அதேபோன்றுதான் நாங்களும் முடிவெடுக்கிறோம். இந்த முறை எங்களுக்கு திமுக ஒரு வாய்ப்பைத் தரும் என நினைக்கிறோம்.

கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானை பிரசாரத்துக்கு அழைத்து வருவேன். எங்கள் உயரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ற அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம். நாங்கள் தேசியக் கட்சி என்பதால் துடைப்பம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்" எனத் தெரிவித்தார்.

சிபிஐ தொடர்ந்த ஊழல் வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்ட 23 பேரையும் விடுவித்து அண்மையில் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் எந்த விதமான குற்றத்திற்கான சதியோ, அதற்கான எண்ணமோ இல்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "குறுகிய கால அரசியலுக்காக மத்திய பாஜக அரசு விசாரணை அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. சற்று வெட்கப்படுங்கள். அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டு, உண்மையை வெளிவரச் செய்த எனது மதிப்பிற்குரிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியாவும் சிறப்பாகச் செய்தீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள்காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "எங்கள் போராட்டத்தில் எப்போதும் எங்களுடன் நின்றதற்கு ஸ்டாலினுக்கு மிக்க நன்றி" எனத் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில், ஆம் ஆத்மி கட்சிக்கு சீட் கொடுத்தால், தேசிய அரசியலை நோக்கிய நகர்வில் இது திமுகவுக்கு பெரிய பலன் கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கினால் தேசிய அளவில் அவருக்கு பெரிய ஆதரவு கிடைக்கக்கூடும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+