“கண்டா வர சொல்லுங்க”.. பரபர போஸ்டர் யுத்தம்! ஆரம்பித்து வைத்த அதிமுக.. கவுண்ட்டர் அட்டாக்கில் திமுக!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், "கண்டா வரச் சொல்லுங்க" என போஸ்டர் பரப்புரையை ஆரம்பித்துள்ளனர் அதிமுகவினர். அதற்கு பதிலடியாக அதே பாணியில் கவுன்ட்டர் அட்டாக்கை தொடங்கியுள்ளது திமுக.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் அனல் கிளம்பியுள்ளது. ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க, எதிர் அணியை குறிவைத்து தேர்தல் பிரச்சாரமும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், அதிமுக - திமுக இடையே போஸ்டர் யுத்தம் இப்போதே தொடங்கியுள்ளது.

திமுகவை பொறுத்தவரை, ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக மக்கள் நீதி மய்யம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், அதிமுகவும், பாஜகவும் லோக்சபா தேர்தலுக்கு தனித்தனியாக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக அணிக்குச் செல்லுமா, பாஜக அணிக்குச் செல்லுமா என்பது இன்னும் சஸ்பென்சாகவே இருந்து வருகிறது. அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் வேலைகளைத் தொடங்கியுள்ளன. கட்சிகளின் விளம்பர டீம்கள் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
அந்தவகையில், அதிமுக சார்பில் ஒரு போஸ்டர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தொகுதி பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 'கண்டா வரச் சொல்லுங்க' என்று அதிமுகவினர் போஸ்டர் அடித்து தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களிலும் போஸ்டர்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டின் உரிமையை திமுக எம்.பி.க்கள் எப்படி பறிகொடுத்தார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை விமர்சிக்கும் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கண்டா வரச் சொல்லுங்க போஸ்டர் யுக்தியை கையில் எடுத்துள்ளனர் அதிமுகவினர்.
'மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களே! இவர்களை நீங்கள் பார்த்தீர்களா?' என, எம்.பிக்கள் புகைப்படங்களுடன் 'கண்டா வரச் சொல்லுங்க' என போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மேலும், "என்னைத் தவிர என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறியவரை கண்டா வரச் சொல்லுங்க" என பல விதங்களில் போஸ்டர்களை ஓட்டியுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுகவின் 'கண்டா வரச் சொல்லுங்க' பிரச்சாரத்தை ஓவர்டேக் செய்யும் வகையில், அதே ஸ்டைலில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில், 'பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை கண்டா வர சொல்லுங்க' எனவும் 'நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை.. கண்டா வர சொல்லுங்க' எனவும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஆக, போஸ்டர் யுத்தத்தால் மக்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் உறுதி.












Click it and Unblock the Notifications