மதுரை, கோவையை மையமிடும் திமுக கூட்டணி.. மெட்ரோ விவகாரத்தில் பாஜக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கோவையிலும், நாளை மறுநாள் மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் போல மதுரை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. கோவையில் 39 கி.மீ தூரத்துக்கு அவிநாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி வரை, உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டது.

அதேபோல் மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதியளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே உள்ளதால் அனுமதி அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை மற்றும் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், "தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் செயலாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ''மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி'' கட்சிகள் சார்பில் நாளை நவம்பர் 20 ஆம் தேதி வியாழக்கிழமை கோவையிலும், நாளை மறுநாள் நவம்பர் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், மதுரை மற்றும் கோவையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications