பார்த்து எவ்ளோ நாளாச்சு... உங்க பக்கம்லாம் கொரோனா எப்படி... பரஸ்பர நலம் விசாரித்த எம்.எல்.ஏ.க்கள்..!
சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எம்.எல்.ஏ.க்கள் ஒருவரை ஒருவர் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே முடித்து வைக்கப்பட்டது. ஒரே நாளில் 4 முதல் 5 துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதிவிரைவாக அந்தக் கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் 6 மாதங்களுக்கு இன்று தொடங்கிய சட்டசபைக் கூட்டத் தொடர் 3 நாட்களுக்கு மட்டுமே நடைபெற உள்ளது. இந்த 3 நாட்களில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதோடு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. நாளையும், நாளை மறுதினமும் நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
இதனிடயே பல மாதங்களுக்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒருவரை ஒருவர் இன்று சந்தித்ததால் பரஸ்பர நலம் விசாரித்துக்கொண்டனர். கட்சி பேதங்களை கடந்து திமுக, அதிமுக என எந்த பாகுபாடும் இல்லாமல், ''பார்த்து எவ்வளவு நாளாச்சு, கொரோனா உங்க பக்கம் எப்படி? நல்லா இருக்கீற்களா?'' என பாசமழை பொழிந்து பரவசம் அடைந்தனர்.
மேலும், எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் போல் ஒரு பெரிய கூட்டத்தையே காரில் அழைத்து வராமல் தனியாக சட்டசபைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே கொரோனாவுக்கு எந்த கசாயம் குடிக்க வேண்டும், எந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற டிப்ஸ்களையும் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் சகாக்களிடம் பகிர்ந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications