இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய திமுக நிர்வாகி பலி.. அதிர்ந்து போன உதயநிதி!
சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த திமுக தொண்டர் சாலை விபத்தில் பலியானார். அவரது மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிதி உதவி வழங்கியுள்ளார்.
சேலம் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற திமுகவின் இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்த சதீஷ் குமார் என்ற திமுக தொண்டர் சாலை விபத்தில் உயிரிழந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த திமுக தொண்டர் சதீஷ் குமாருக்கு திருமணமாகி கார்த்திகா (24) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில், சதீஷ் குமார் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் திமுக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி தலைமையில், சுமார் 50 பேர் தனியார் பேருந்து மூலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாடு முடிந்து நேற்று இரவு சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே பேருந்தை நிறுத்திவிட்டு அனைவரும் சாப்பிடுவதற்காக இறங்கி சென்றுள்ளனர்.
அப்போது பேருந்தில் வந்திருந்த திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் நெசவாளர் காலனியை சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ் குமார் (33), என்பவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது கோயமுத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் உடலை கைப்பற்றி சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கழக உறுப்பினர் தம்பி சதீஷ் குமார், சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.
பூத் கமிட்டி உறுப்பினராக ஆக்கப்பூர்வமாக கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்த தம்பி சதீஷ்குமாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு கழகம் என்றும் துணை நிற்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
சதீஸ் குமார் உடல் வைக்கப்பட்டிருந்த சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு வந்த திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஈரோடு பிரகாஷ், மாநாட்டிற்கு வந்து விபத்தில் பலியான சதீஷ் குமார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சதீஷ் குமார் குடும்பத்தினருக்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் முதல் உதவி நிதியாக ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications