"அவர்களுக்கு" சிவப்பு கம்பளம்.. நாங்க கடைசிவரை கொடி கட்டிகிட்டே இருக்கிறதா?.. திமுகவில் குமுறல்
சென்னை: மாற்றுக் கட்சியினருக்கு புதிய பதவிகளை திமுக கொடுத்து வருவதால் நீண்ட காலமாக திமுகவில் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு தலைவர் ஸ்டாலின் மீது அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
திறமை இருந்தால் பணமும், பதவியும் தானாக வரும் என சொல்வார்கள். அந்த வகையில் அரசியல் கட்சிகளில் தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள், தலைமையை தங்கள் திறமையால் மனம் குளிர வைப்பவர்கள், தலைமை எள் என்றால் எண்ணெயாக நிற்றல் உள்ளிட்டவைகளை செய்யும் தொண்டர்களுக்கு நிச்சயம் ஒரு நாள் பதவியும், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
இதுதான் காலம் காலமாக கட்சிகள் கடைப்பிடித்து வரும் பழக்கம். ஆனால் அண்மைக்காலமாக திமுக ஒரு புதுமையை கடைப்பிடித்திருக்கிறது. அதன்படி மாற்றுக் கட்சியில் இருந்து வருவோருக்கு சிகப்பு கம்பளமிட்டு வரவேற்று அவர்களுக்கு கடந்த கட்சியில் நினைத்து பார்க்கக் கூட முடியாத பொறுப்புகளையும் பதவிகளையும் வாரி வழங்குவது.

தங்கதமிழ்ச் செல்வன்
அந்த வகையில் ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, பிகே சேகர் பாபு, தங்கதமிழ்ச் செல்வன் உள்ளிட்டோரை உதாரணமாக குறிப்பிடலாம். இதில் தங்கதமிழ்ச்செல்வனை தவிர்த்து மற்றவர்கள் எல்லாம் அமைச்சர்கள். தங்கமும் தனக்கு கொடுத்த தொகுதியில் வென்றிருந்தால் அவரும் அமைச்சராகியிருப்பார்.

கடும் போட்டி
ஆனால் அவர் சேர்ந்த மாத்திரத்தில் கட்சியில் உயர் பதவி கொடுக்கப்பட்டது. அது போல் தேர்தலில் கடுமையாக போட்டியிட்டு தோல்வி அடைந்ததால் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது. இது ஒரு புறமிருக்க திமுகவின் பலம் குறைந்த பகுதிகளில் மாற்றுக் கட்சியில் பலம் வாய்ந்த ஆட்களை பிடிக்கும் பணியில் திமுக இறங்கியுள்ளது.

செந்தில் பாலாஜி ஆதரவு
இதில் செந்தில் பாலாஜி முழு ஆதரவு தந்து தலைமை சொல்லும் அசைன்மென்ட்டை வெற்றிகரமாக செய்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் திமுகவை மேலும் பலப்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த டாக்டர் மகேந்திரன் தற்போது திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். உடன் மதுரவாயல் தொகுதியின் மநீம வேட்பாளராக இருந்த பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்துவிட்டார்.

விஜிலா சத்யானந்த்
இதையடுத்து அதிமுகவில் எம்பியாக இருந்த விஜிலா சத்யானந்தும் திமுகவில் இணைந்துவிட்டார். மகேந்திரன் இணைவது குறித்து தகவல்கள் வெளியாகின. ஆனால் பத்மப்ரியாவும் விஜிலாவும் இணைவது குறித்து கடைசி வரை தகவல்களே வெளியாகவில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து வந்த செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரை போல இவர்களுக்கும் திமுக முக்கிய பதவி வழங்கும் என தெரிகிறது.

மாற்றுக் கட்சியினர்
என்னதான் ஸ்டாலின் மாற்றுக் கட்சியினரை அரவணைத்தாலும் இதை தொண்டர்கள் விரும்பவில்லையாம். காரணம், மாற்றுக் கட்சியினருக்கு பதவி, பொறுப்பு தரப்படுகிறது. ஆனால் கட்சிக் கொடி கட்டியவர்கள் காலம் காலமாக கொடிக் கட்டும் நிலையே நீடிக்கும் அவலம் இருப்பதால் உடன்பிறப்புகள் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனராம்.












Click it and Unblock the Notifications