திமுக - காங்., கூட்டணியில் புதிய புயல்.. ‘கை' வென்ற 7 தொகுதிகளை கேட்கும் ‘உதயசூரியன்'.. குழப்பம்
சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவாகி உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புயல் வீச தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்ற 7 தொகுதிகளை விட்டு கொடுக்கும்படி திமுக கூறியிருப்பது தான். அந்த தொகுதிகள் என்னென்ன? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டணியில் கருத்து வேறுபாடு அதிகரித்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும். 2021ம் ஆண்டில் ஒதுக்கியதை விட கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியது.

இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. திமுக - காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கூறிய கருத்துகள் கூட்டணிக்குள் பிரளயத்தை ஏற்படுத்தின. இந்த கூட்டணி முறிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
28 + 1 சீட் ஒதுக்கீடு
வரும் சட்டசபை தேர்தலில் திமுகவிடம், காங்கிரஸ் கட்சி 39 முதல் 41 சட்டசபை தொகுதிகளும், 2 ராஜ்யசபா சீட்டும் கோரியது. ஆனால் திமுக ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் தலையீடு செய்து கூட்டணியை உறுதி செய்தனர். தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பிரச்சனை
இதனால் இனி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை வராது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி கேட்கும் சட்டசபை தொகுதிகள் தான். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 18 இடங்களில் காங்கிரஸ் வென்றது.
7 தொகுதிகளை கோரும் திமுக
இதனால் கடந்த முறை வென்ற 18 தொகுதிகளும் மீண்டும் தங்களுக்கு வேண்டும் எனவும், மீதமுள்ள 10 தொகுதிகள் தொடர்பான பட்டியலையும் காங்கிரஸ் கட்சி வழங்கி உள்ளது. ஆனால் திமுக அதனை ஏற்கவில்லை. கடந்த முறை வென்ற 18 தொகுதிகளில் 11 தொகுதிகளை தருகிறோம். 7 தொகுதிகளை எங்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அதிருப்தி
அதன்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருக்கும் விருத்தாச்சலம், ஊட்டி, அறந்தாங்கி, நாங்குநேரி, சிவகாசி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளை திமுக கேட்கிறது. இந்த தொகுதிகளில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செயல்பாடு சரியில்லை. இதனால் இந்த தொகுதிகளை தங்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வென்றார். அவர் காலமான பிறகு மீண்டும் அந்த தொகுதி அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றார். அவரும் காலமானார். இதையடுத்து அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து திமுக பறித்து இடைத்தேர்தலில் சந்திரகுமாரை நிறுத்தி வென்றது. இதனை காங்கிரஸ் கட்சி அப்போதே விரும்பவில்லை.
இழுபறியாகும் தொகுதி பங்கீடு
இப்போது திமுகவின் செயலால் 7 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு 'நோ' சொல்ல வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதையும் விட்டு கொடுத்தால் தேர்தலில் வெல்வது கடினம் என்பதை காங்கிரஸ் மேலிடம் உணர்ந்துள்ளது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்வது இழுபறியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் புயல் வீச தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications