சென்னை டூ டெல்லி விமானத்தில்.. பணிப்பெண்ணிடம் அத்துமீறிய திமுக கவுன்சிலர் கைது! பரபர தகவல்
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணிடம் குடிபோதையில் அத்துமீறிய திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரை சென்னை மீனம்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இண்டிகோ விமான நிறுவனமும் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்
இந்த விமானத்தில் கடந்த 25 ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் தியாகு என்ற இரண்டு பேரும் பயணித்துள்ளனர். அப்போது, விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றிய 25 வயது இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இளம்பெண்ணை ஒருமையில் அழைத்து அவரது ஊர் பெயரை கேட்டு அத்துமீறியதாகவும் சொல்லப்படுகிறது. குடிபோதையில் இருந்த இருவரும் இந்த அத்துமீறிய செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரின் செயலால் அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண் சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.
சென்னைக்கு திரும்பும் போது
இந்த புகாரின் அடிப்படையில் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாரு திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பர் தியாகுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மனை ஏற்று இருவருமே விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று மாலை டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பியுள்ளனர்.
விமான நிலையத்தில் வைத்தே கைது
அப்போது சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரபாகரன் திருவள்ளூரில் 6-வது வார்டு கவுன்சிலர் என்பதும் தியாகு என்பவர் வழக்கறிஞராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தேவைப்பட்டால் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications