பிரியாணி கடையில் மாமூல் கேட்டு சூறையாடிய திமுக கவுன்சிலர் உறவினர்கள் - தட்டி தூக்கிய போலீஸ்
பல்லாவரம் அருகே மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் மாமூல் கேட்டு தர மறுத்த கடையின் உரிமையாளர் மற்றும் கடையை அடித்து சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: திருநீர்மலையில் மாதம் பத்தாயிரம் ரூபாய் மாமுல் கேட்டு தர மறுத்த பிரியாணி கடை உரிமையாளரை தாக்கியதோடு கடையையும் சில ரவுடிகள் சூறையாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து அராஜகம் செய்த ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதில் ஒருவர் திமுக கவுன்சிலரின் மைத்துனர் ஆவார்.
Recommended Video
பிரியாணிக்கடையை சூறையாடிய ரவுடிகள் சுகுமார், மற்றும் தினேஷ் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் திருநீர்மலை,ரங்கா நகர் 2-வது தெருவில் வசித்து வருகின்றனர். இதில் தினேஷ், தாம்பரம் மாநகராட்சியின் 31வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் சித்ரா முரளிதரனின் மைத்துனர் ஆவர். கடைகளில் மாமூல் வசூலிப்பதும் ரவுடித்தனம் செய்வதும்தான் இவர்களின் வேலை.
பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் அனீஷ் என்பவர் பிரியாணி கடை,மற்றும் டீ ஸ்டால் என இரண்டு கடைகள் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்குச் சென்ற சுகுமாரும், தினேசும் கடையில் இருந்த அனீசிடம் மாதம் மாதம் 10.000 ரூபாய் செலவிற்கு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடை நடத்த விடமாட்டோம் என கூறி மிரட்டியதாக தெரிகிறது.

கடைகள் சூறை
இதனையடுத்து பயந்து போன அனீஷ் 3,000 ரூபாய் மட்டும் அனுப்புவதாகக் கூறி கூகுள் பே மூலமாக அனுப்பினார்.
மீதமுள்ள 7,ஆயிரம் ரூபாயை உடனே தரும்படி கேட்டு மிரட்டினர். அதற்கு அனீஷ் மறுக்கவே, ஆத்திரமடைந்த இரண்டு பேரும் சாலையில் இருந்த கற்களை எடுத்து கடையை நோக்கி வீசியுள்ளனர். இதில் கடையில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறியது,அதுமட்டுமின்றி கடைகளை அடித்து நொறுக்கி கடையின் உரிமையாளரையும் தாக்கினர்.

காவல் நிலையத்தில் புகார்
இதை பார்த்ததும் கடையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.அதன்பின் பொதுமக்கள் கூட்டம் கூடவே இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி வியாபாரிகள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,சேதமடைந்த கடைகளை பார்வையிட்டனர்.

ரவுடிகள் கைது
பின்னர்,அந்தப் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது,மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர்கள் தினேஷ், சுகுமார் என்பது தெரியவந்தது. வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

கொலை கொள்ளை வழக்குகள்
விசாரணையில் சுகுமார் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பல்லாவரம்,பம்மல் அதன் சுற்றியுள்ள கடைகளில் 5000, மற்றும் 10,000 வரை மாமூல் கேட்டு வாங்கி வந்ததும் தெரியவந்தது.

புழல் சிறையில் அடைப்பு
அதுமட்டுமின்றி சங்கர் நகர் காவல்நிலையத்தில் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. தினேஷ் சுகுமார் உடன் இணைந்து கடந்த ஆறு மாத காலமாக மாமூல் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர் அதன்பின்னர். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications