"மோடி அல்வா.." கிளாம்பாக்கம், கோவை, நெல்லையில்.. வச்சி செஞ்ச திமுக.. பாக்கெட்டை கவனித்தீர்களா?
சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தர மறுப்பதை கண்டித்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோவை பேருந்து நிலையம், திருநெல்வேலி பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் திமுகவினர் அல்வா கொடுத்தனர். மத்திய அரசு அல்வா கொடுப்பதை உணர்த்தும் வகையில் இப்படி செய்வதாக திமுகவினர் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மிகப்பெரிய வெள்ளம் வரும் போது, இயற்கை பேரிடர்களை மாநிலங்கள் சந்திக்கும் போது மத்திய அரசு தோள் கொடுத்து உதவுவது வழக்கம். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கணிசமான நிதியினை அந்த மாநிலங்களுக்கு ஒதுக்குவதை மத்திய அரசும் வழக்கமாக வைத்திருக்கிறது.

ஆனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடந்த ஆண்டு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை ரேஷன் கடைகள் மூலம் விநியோகித்தது.
அதேநேரம் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதியை சீரமைக்க மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர மத்திய அரசிடம் நிதியுதவி கோரியது. மத்திய அரசு சார்பில் குழுவினர் வந்து தமிழகத்தை பார்வையிட்டு மத்திய அரசிடம் தமிழக வெள்ள பாதிப்பு குறித்து அறிக்கையை சமர்பித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்பிக்கள் குழுவினர் நேரடியாக சந்தித்து மனுவும் அளித்தனர்.. ஆனால் இன்று வரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
அதேபோல் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி பகிர்வை அண்மையில் வெளியிட்டது. இதில் தமிழகத்திற்கு 490000 கோடி என்கிற அளவில் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியது. இதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் அதற்கு 26 பைசா தான் திரும்பி தரப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 2 ரூபாய்க்கு மேல் தரப்படுவதாக கூறப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் பாஜக அரசை சம்பவம் செய்த திமுகவினர்🔥🔥
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) February 8, 2024
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு அளிக்கும் நிதி பகிர்வை உணர்த்தும் வகையில் திமுக சார்பில் மக்களுக்கு அல்வா வழங்கப்பட்டது!!#BJPLootingOurTax #SouthTaxMovement pic.twitter.com/l2OrUOlww4
தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்கள் எல்லாமே வரி பகிர்வில் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று கர்நாடகா அரசு சார்பில் போராட்டம் டெல்லியில் நடந்தது. இன்று கேரள அரசு சார்பில் போராட்டம் டெல்லியில் நடந்துள்ளது. தமிழக அரசின் சார்பிலும் போராட்டங்கள் இன்று நடந்துள்ளது. டெல்லியில் திமுக கூட்டணி எம்பிக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் நூதன போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக முன்னெடுத்துள்ளனர். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ஜீரோ என்று குறிப்பிட்ட பாக்கெட்டுகளில் அடைத்து அல்வா கொடுத்தனர். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி தர மறுப்பதை கண்டித்து சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏராளமான திமுகவினர் அல்வா கொடுத்தனர்.. இதேபோல் கோவையில் அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தை திமுகவினர் மேற்கொண்டனர். திருநெல்வேலியிலும் இதேபோல போராட்டம் நடந்தது.












Click it and Unblock the Notifications