திமுக மா.செக்கள் + வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நிறைவு! வாக்கு எண்ணிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று முடிந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்தக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் 57 லோக்சபா தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஜூன் 4 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூமை அரசியல் கட்சிகளின் முகவர்களும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இன்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 11 மணி முதல் காணொலி வாயிலாக நடைபெற்று வந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எடுத்துரைத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க மாவட்ட செயலாளர்கள், திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது தலைமை முகவர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இன்றைய நாளில் தான், டெல்லியில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பில் டிஆர் பாலு பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தல் முடிவுகளை எதிர்கொள்வது எப்படி? பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் வேட்பாளர் யார்? கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications