அண்ணா அறிவாலயத்துக்கு பதில்... அண்ணா நகருக்கு படையெடுக்கும் உடன்பிறப்புகள்
சென்னை: திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துகொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்திற்கு நிர்வாகிகளை பற்றிய புகார்கள் நாள்தோறும் சென்ற வண்ணம் இருக்கின்றன.
சென்னைக்கு வரும் வெளிமாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்துக்கு செல்கிறார்களோ இல்லையோ அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள ஐ பேக் நிறுவனத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்தின் அலுவலகம் இன்னும் முழுமையாக நிறுவப்படாத சூழலில் அங்கு வரும் நிர்வாகிகளை கேட்டுக்கு வெளியேவே நிறுத்தி இங்கு யாரையும் பார்க்க முடியாது என திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஒப்பந்தம்
இந்திய அளவில் மிகவும் பிரபலமான தேர்தல் வியூக வகுப்பாளராக கருதப்படும் பிரசாந்த் கிஷோர் எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் திமுகவை வெற்றிபெற வைப்பதற்கான முழு பொறுப்பையும் பிரசாந்த் கிஷோர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள், மக்களின் மனநிலைகளை பற்றி அறிய தனது ஆட்கள் மூலம் சர்வே எடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அறிமுகம்
இதனால் பிரசாந்த் கிஷோரின் அறிமுகத்தை பெறுவதற்காக திமுகவில் உள்ள அனைத்து மட்ட நிர்வாகிகளும் தங்களால் முடிந்த வழிகளிலும் முட்டி மோதி பார்க்கின்றனர். மாவட்டங்களில் குறைந்தபட்சம் தனக்கு போட்டியாக உள்ள நிர்வாகிகளை பற்றி ஒரு புகார் கடிதம் எழுதி, அதுவும் ஆங்கிலத்தில் தயார் செய்து அண்ணா நகரில் உள்ள ஐ பேக் நிறுவன அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால் அந்த கடிதங்கள் அங்கே பிரித்துக்கூட பார்க்கப்படுவதில்லை என்பது தனிக்கதை. வழக்கமாக இது போன்ற புகார் கடிதம் அண்ணா அறிவாலயத்துக்கு தான் அனுப்பி வைக்கப்படும். இப்போது என்னவென்றால் ஒரு புது பார்முலா அறிமுகமாகிறது.

அண்ணா நகர்
இதேபோல் சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வரும் நிர்வாகிகள் எதற்கும் இருக்கட்டும் என அண்ணா நகரில் உள்ள ஐ பேக் நிறுவனத்திற்கும் விசிட் அடிக்கத்தொடங்கியுள்ளனர். ஆனால் அங்கு கேட்டுக்குள் கூட உள்ளே விடாமல் துரத்தி அடிக்கப்படுகின்றனர். இதனால் வேறு வழிகளில் பிரசாந்த் கிஷோர் டீமை நெருங்குவதற்கு உ.பி.க்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் திமுக தலைமையை தவிர வேறு எவரையும் பார்ப்பதில்லை என்பதில் பிரசாந்த் கிஷோரும் சரி அவரது டீமும் சரி உறுதியாக உள்ளது.

வதந்தி
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ''பிரசாந்த் கிஷோர் கைகாட்டும் நபருக்கு தான் எம்.எல்.ஏ. சீட், அதனால் அவர் அறிமுகம் தேவை என கட்சியில் சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது. இதன் காரணமாகவே அவரை சந்திக்க எங்காளுக ஆர்வம் காட்டுறாங்க'' எனக் கூறினார். மேலும் ''பிரசாந்த் கிஷோர் காசு வாங்கிகொண்டு வியூகம் வகுத்துகொடுக்கவே வந்திருக்கிறார், அவரிடம் போய் நிற்பதெல்லாம் தேவையற்ற வேலை'' என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications