தேர்தல் வரும் நேரத்தில்! பெரிய பிளான் போடுறாங்க! SIRக்கு தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: SIR-க்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்து உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் SIR தவறான நோக்கம் கொண்டது என்று திமுக குற்றச்சாட்டு வைத்துள்ளது.
தி.மு.க. சார்பில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார், ஜனநாயகத்திற்கு எதிராக S.I.R. மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது திமுக.

திமுக எதிர்ப்பு
திமுக இந்த திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதோடு இல்லாமல் இதற்கு எதிராக 50+ கட்சிகளை கொண்ட அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. மேலும் S.I.R. நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்குகள் தாக்கல் செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட கண்டனத்தில், பாரதிய ஜனதா கட்சியும் (BJP) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) இணைந்து, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) சிறப்பு தீவிர திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகளைப் பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தினர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இன்று தொடக்கம்
12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் வீடு, வீடாக சென்று 77 ஆயிரம் அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) இன்று தொடங்கும் என்று தெரிவித்தது. இது புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கும் மாநில அளவிலான நடவடிக்கைக்கு அடித்தளம் அமைக்கும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ள "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி" (SIR) தொடர்பான விளக்கங்களை சென்னை உயர் நீதிமன்றத்திடம் அளித்துள்ளது. தலைமை நீதிபதி மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு முன்பு இந்த விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.
வழக்கமான சிறப்புச் சுருக்கத் திருத்தத்தைப் (SSR) போலன்றி, SIR நடைமுறையின் கீழ், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைத் தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொரு வாக்காளரும் புதிய கணக்கெடுப்புப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் மாநிலத்திற்கான புதிய தகுதிவாய்ந்த வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய தகுதிவாய்ந்த வாக்காளர் பட்டியல்
தேர்தல் ஆணையத்தின் நிலைக்குழு வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் அளித்த தகவல்படி, SSR என்பது பெயர்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவதன் மூலம் தற்போதுள்ள பட்டியல்களைப் புதுப்பிப்பதாகும். ஆனால், SIR முற்றிலும் புதியதாகத் தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு வாக்காளரும் ஒரு கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
இந்த படிவத்தை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLOs) பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை BLO-க்கள் சேகரித்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒப்புதல் கடிதம் வழங்குவார்கள். வாக்காளரின் விவரங்களுக்கும், ஏற்கனவே உள்ள பதிவுகளுக்கும் இடையே பொருந்தாமை இல்லாவிட்டால், எந்த ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை.
ஒப்புதல் கடிதம் வழங்குவார்கள்
படிவங்களைச் சமர்ப்பிக்காதவர்களை அடையாளம் காண BLO-க்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள், வயது மற்றும் அடையாளச் சான்றுடன் தனி பிரமாணப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து படிவங்களும் BLO-க்களிடம் போதுமான அளவில் இருக்கும் என ராஜகோபாலன் நீதிமன்றத்திற்கு உறுதியளித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டமும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ம், SSR மற்றும் SIR ஆகிய இரு திருத்த நடவடிக்கைகளையும் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த SIR செயல்முறை கடந்த காலத்தில் குறைந்தது பத்து முறையாவது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இந்த நடைமுறை
தமிழ்நாட்டில் கடைசியாக 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. "தகுதியுள்ள குடிமக்கள் யாரும் விடுபடாமலும், தகுதியற்ற எவரும் பட்டியலில் இடம்பெறாமலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்" என ராஜகோபாலன் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி, அதிகாரிகளுக்கான பயிற்சி நவம்பர் 3 அன்று நிறைவடைகிறது. வாக்காளர் கணக்கெடுப்பு நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட்டு, ஜனவரி 8, 2026 வரை ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகள் பெறப்படும்.
இந்த ஆட்சேபனைகள் மீதான விசாரணைகள் ஜனவரி 31க்குள் முடிக்கப்பட்டு, "இறுதி வாக்காளர் பட்டியல்" பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும். இந்தத் தகவல்கள், சென்னையில் உள்ள தாம்பரம் மற்றும் டி நகர் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலைத் திருத்தி "தூய்மைப்படுத்த" கோரும் மனு மீதான விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications