நீங்க சர்வாதிகாரியாகச் செயல்படுவதில் தவறில்லை! முதல்வர் ஸ்டாலினுக்கு பேராசிரியர் அன்பழகன் மகன் மடல்!
சென்னை: சில நேரங்களில் கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாகச் செயல்படுவதில் தவறில்லை எனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மறைந்த பேராசிரியர் அன்பழகன் மகன் அன்புச்செல்வன் கடிதம் எழுதியிருக்கிறார்.
Recommended Video
ஆனாலும் கழகத் தோழர்கள் உங்களை என்றும் சிறந்த ஜனநாயகவாதியாகவே காண விருப்பப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புச்செல்வன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

திமுக ஆட்சி
''அன்புச்சகோதரர் தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, அன்பான வணக்கம்,
உங்களது தலைமையிலான கழக ஆட்சியில் தொழில்துறை சார்ந்த முனைப்புகள் வேகம் கூட்டியுள்ளது அடுத்த தலைமுறையைப் பாதுகாக்கும்.ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் தொழில் துறையில் 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுமார் ரூபாய் 2.2 லட்சம் கோடிகளுக்கு கையெழுத்திடப்பட்டன, அதில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது ஒரு முக்கிய சாதனையாகும். இதன் பயனாக தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.''

தொழில் துறை
''பல லட்சக்கணக்கான தமிழர் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்கு ஆளாவீர்கள். உங்களது வழிகாட்டுதலில் கடமையாற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவை, தங்கமான அமைச்சர் என்று பாராட்டியது மிகவும் பொருத்தமான ஒன்று. உங்கள் மனதின் ஆழத்திலிருந்து வெளியான வார்த்தைகள். தமிழகத்தின் நிலைத்த மற்றும் நீடித்த பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக உங்களது தொழிற்துறை அமைச்சகம் அமையும்.''

உதயநிதி ஸ்டாலின்
''ஒரு பக்கம் ஆட்சியைக் கொண்டு தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் பணியை தொய்வின்றி செய்து வரும் வேளையில், ஆட்சிக்கட்டிலுக்கு அடிப் படையானது கழகம் என்றுணர்ந்து தாங்கள் செயல்படும் விதம் அருமை. தலைவர் என்ற முறையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு வரும் அதே வேளையில், இளைஞர் அணியின் செயலாளரான தம்பி உதயநிதி தமிழகமெங்கும் திராவிட மாடல் பாசறைகளையும், கழக மூத்த முன்னோடிகளை மாவட்டம் தோறும் அடையாளங்கண்டு அவர்களைக் கௌரவிக்கும் பாங்கும் சிறப்பான ஒன்று.''

வெற்றி அழகன் பாராட்டினார்
''ஆக்கப்பூர்வமான அவரது கழகப் பணிகள் தொடரட்டும், அவருக்கு எனது அன்பு வாழ்த்துகள். நாமக்கல்லில் நடைபெற்ற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பியதிலிருந்து வெற்றி அழகன் உங்களின் பேச்சை சிலாகித்து பாராட்டினான். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் உரையாற்றியது சிறப்பாக அமைந்தது.''

சர்வாதிகாரியாக
''உள்ளாட்சிப் பொறுப்புகளில் பதவியேற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பின் தன்மையும், அதற்கு செயலாற்ற பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரமான கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டின் அடிப் படையில் அவர்கள் தொண்டாற்ற வேண்டும் என்று தலைவனின் அன்புக் கட்டளையாக அறிவுறுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது. அதேபோல் சில நேரங்களில் கட்சியின் நலனுக்காக சர்வாதிகாரியாகச் செயல்படுவதில் தவறில்லை.''

சிறந்த ஜனநாயகவாதி
''அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. (குறள் எண் - 513) என்ற குறளுக்கு பொழிப்புரையாக; பொறுப்பில் உள்ளவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்தியது காலத்திற்கேற்ப அமைந்துள்ளது. கழகத் தோழர்கள் உங்களை என்றும் சிறந்த ஜனநாயகவாதியாகவே காண விருப்பப்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன், ஏனென்றால் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பிகள், கலைஞரின் உற்ற உடன்பிறப்புகள், உங்களின் இரத்த நாளங்கள்.வாழ்க உங்களின் திராவிடத் தொண்டு.''












Click it and Unblock the Notifications