Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாஞ்சில் சம்பத்துக்கு சைக்கிளா வேணும்? எம்எல்ஏ விடுதியில் அறை எண் 305 ஞாபகம் இருக்கா? திமுக நிர்வாகி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் திமுக கூட்டங்களில் பேசி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த நாஞ்சில் சம்பத் இன்று தவெகவில் இணைந்ததும் திமுகவில் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது என கூறியதை திமுக நிர்வாகி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Nanjil Sampath

இதுகுறித்து திமுக நிர்வாகி சாவல்பூண்டி மா.சுந்தரேசன் என்பவர் கூறியிருப்பதாவது: அன்புள்ள நாஞ்சில் சம்பத்... நான் சாவல் பூண்டி சுந்தரேசன். என்னை உனக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். என்னை நீயும் உன்னை நானும் கடந்த 36 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலத்திற்கு மேலாகஅறிந்தவர்கள்.

நீ தி.மு.க.பேச்சாளனாக அறிமுகமான 1989 களில் மாநில தலைநகரமான சென்னைக்கு நீ வந்தால் சென்னையில் கட்டண விடுதிகளில் தங்குவதற்கு வசதியும் வாய்ப்புமின்றி நீ சுற்றி சுற்றி வந்த காலத்தில் சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதி (எம்எல்ஏ ஹாஸ்டலில் ) 305 எண் அறையில் நீ தஞ்சம் அடைந்தபோது "நாஞ்சில் சம்பத் நம்முடைய அறையில் தங்கிக் கொள்ளட்டும். அவருக்கு அறையின் இன்னொரு சாவியை கொடு " என்று திருவண்ணாமலை திமுக சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி சொல்ல நீ அங்கு தங்கி கொள்வதற்காக சட்டமன்ற 305 அறை சாவியை உன்னிடம் கொடுத்தவன் நான்.

ஏறக்குறைய இரண்டு வருட காலம் 305 அறையில் பிச்சாண்டியின் சட்டமன்ற உறுப்பினர் அறையில் நான் - நீ - என்று தங்கி இருந்தோம். அந்த காலத்தில் நாம் ஒரே அறையில் தங்கி இருந்தாலும் - உனக்கு கிடைத்த பொதுக் கூட்டங்களுக்கு நீ -போனது போக ஏனைய நேரங்களில் நீ புத்தகங்களே கதியாக இருப்பாய் - நானும் தான்.

நான் கு.பிச்சாண்டியுடன் அறிவாலயம், கோபாலபுரம், சட்டமன்றம் என்று சென்று விடுவேன். இரவு நேரங்களில் நானும் அவரும் திருவண்ணாமலை நண்பர்களும் இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்கு சென்று வருவோம். நீ அறையில் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருப்பாய். திமுக மேடைகளில் அன்றைக்கு அற்புதமாக பேசிய உன்னை, தமிழகத்தின் கடைக்கோடியில் கன்னியாகுமரியில் மணக்காவிளை என்கிற ஊரில் மளிகை கடை வைத்திருந்த பாஸ்கரனின் மகனான உன்னை தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகமும், கழகத் தோழர்களும் மேடை ஏற்றி திமுக பேச்சாளராக அறிமுகப்படுத்தி உன் வாழ்க்கை வசதிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

உன்னுடைய திருமணம் நாகர்கோவிலில் தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடந்த போது நானும் பிச்சாண்டியும் திருமணத்தில் வந்து கலந்து கொண்டோம். நம்முடைய நட்பு நீடித்தது. 1993 -1994ல் அண்ணன் வை.கோபாலசாமி (வைகோ) தி.மு.கவை விட்டு விலகி ம.தி.மு.க ஆரம்பித்தபோது நீ அவரோடு போகப் போவதாக சொல்ல "வேண்டாம் கருணாநிதியுடனே இருப்போம்" என்று நான் சொல்ல நம் இருவருக்குள் விவாதம் பெரிதாகி "நீ மிகவும் உணர்ச்சி வசப்படுகிறாய் அண்ணன் கோபால்சாமி அவர்களும் உணர்ச்சிவசப்பட்டு கட்சி ஆரம்பிக்கிறார். அது சரியாக வராது" என்று நான் சொல்ல மிகவும் உணர்ச்சி வசப்படுகிற நீ... நீ உணர்ச்சிவசப்பட்ட உந்துதலில் மதிமுகவிற்கு போனாய்.. எப்போது அண்ணன் வை.கோபால்சாமி பக்கம் சென்றாயோ அப்போதே உன் மீது இருந்த மதிப்பு மரியாதை எனக்கு போய்விட்டது.

நம்முடைய நட்பு நீடிக்கவில்லை விலகி விட்டோம். பரவாயில்லை அங்கு போனாய். மதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பொறுப்பை பெற்றாய் போனவன், கொள்கை பரப்பு செயலாளர் ஆனவன் தமிழ்நாட்டில் வேறு எந்த பேச்சாளரும் பேச முடியாத அளவுக்கு உன்னை அறிமுகப்படுத்திய உன்னை உருவாக்கிய உன்னை வளர்த்த தலைவர் கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் நன்றி இல்லாமல் நாகரிகம் இல்லாமல் மிகக் கேவலமாக பேசினாய்.

உன்னை மேடை ஏற்றி அழகு பார்த்த வசதி வாய்ப்பு ஏற்படுத்திய தி.மு.க வை கழகத்தை கடுமையாக தாக்கி பேசினாய். நன்றி மறந்தாய்! எதை எதிர்பார்த்து அங்கே போனாயோ எனக்கு தெரியாது! அண்ணன் வைகோபால்சாமிவிடம் இருந்து விலகினாய். விலகியவன் நீ தாய்க் கழகமாம் தி.மு.க விற்கு வந்திருந்தால் கூட பரவாயில்லை. ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் சேர்ந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஆகி ஜெயலலிதாவிடமிருந்து இன்னோவா காரை பெற்று "இன்னோவா சம்பத் " என்று அன்று முதல் எல்லோராலும் அழைக்கப்பட்டாய். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டாய். அங்கேயும் தாக்கு பிடிக்காமல் அரசியலில் இருந்து விலகுவதாக பாசங்கு செய்தாய்.

சிரங்கு பிடித்தவனும், மைக்கைப் பிடித்தவனும் சும்மா இருக்க முடியாது. அவன் சொரிந்து கொண்டே இருக்க வேண்டும். இவன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். உன்னாலும் சும்மா இருக்க முடியவில்லை. திமுகவுக்கு ஆதரவாக மேடையேறி பேசினாய். கடந்த ஆறு ஆண்டு காலமாக தி.மு.காரன் காசில் வயிறு வளர்த்தாய், உயிரை வளர்த்தாய் உன்னுடைய இலக்கியப் பேச்சு உன்னுடைய கொள்கை பேச்சு எல்லாம் கோமாளி பேச்சாக மாறுகின்ற அளவுக்கு இன்று நடிகர் கட்சியில் போய் சேர்ந்து கொண்டாய்.

"என் மேனி சிலிர்த்தது, ஆவி துடித்தது", இன்று வசனம் பேசுகிறாய் திமுககாரர்களிடம் இந்த ஆறு ஆண்டுகளாக திமுக மேடைகளில் பேசிப் பேசி லட்ச கணக்கில் சம்பாதித்த நீ அப்பட்டமாக பொய் பேசுகிறாய். நீ.... பிழைப்பு வாதி, காசுக்காக பேசுபவன் என்பதை "தி.மு.க காரர்கள் சைக்கிள் கூட வாங்கி தர மாட்டார்கள்" என்று சொன்ன சொல்லில் இருந்து உன்னை அடையாளப்படுத்தி காட்டினாய்.

உனக்கு வேறு எந்த தொழிலும் இல்லை. நீ பேசிப்பேசியே காசு பார்த்தவன், சம்பாதித்தவன் ... உனக்கே தெரியும் உனக்கு காசு கொடுத்து வளர்த்த திமுகவில் 500-க்கும் மேற்பட்ட தலைமை கழக பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 150 பேருக்கு அதிகமாக முன்னணி பேச்சாளர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் எல்லோருக்குமே திமுகவில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

அவர்களும் வாய்ப்பு எதிர்பார்ப்பதில்லை. அவர்களில் 20 ,30 பேருக்கு மட்டுமே திமுக கூட்டங்களில் பேச வாய்ப்பு கிடைக்கிறது . மொழிப்போர் தியாகிகள் கூட்டமான வீரவணக்க நாள் கூட்டம், தலைமைக் கழகம் அறிவிக்கும் கூட்டங்களில் மட்டுமே ஏனைய 150 பேச்சாளருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலான திமுக பேச்சாளர்கள் திமுக ஆட்சிக்கு வந்த காலத்திலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி கூட்டங்களில் பேசி எதையும் பெரிதாக சம்பாதித்தது இல்லை.

திமுகவில் பேசுகின்ற பேச்சாளர்கள் கொள்கைக்காக பேசுகிறவர்கள். அவர்களுக்கு கூட்டங்களுக்கு பேச போகிறபோது அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்பவர் செய்து கொடுக்கிற சாதாரண ஓட்டல் அறை அல்லது அந்த ஊரில் இருக்கிற அரசாங்கத்தின் ஓய்வு விடுதிகள் என்று அங்கேயே தங்கி கிடைக்கிற வாய்ப்பு வசதிகளிலும் கொடுக்கிற 4000, 5000 ரூபாயிலேயே திருப்தி அடைந்து தொண்டை கிழிய கழகத்தின் கொள்கைகளை பேசி விட்டு வருவார்கள்.

உன்னைப்போல் 25 ஆயிரம் ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் ஒரு லட்சம் அன்று என்று வாங்குபவர்கள் அல்ல. நானும் உன்னைப் போல் திமுகவில் பேச்சாளன் தான் உனக்கு முன்பிருந்தே கழக மேடைகளில் பேசி வருபவன். இன்னும் கேட்டால் உன்னை போல வெறும் பேச்சாளன் இல்லை. உள்ளூரில் திமுகவில் ஒன்றிய அளவிலும் மாவட்ட அளவிலும் 15 வருடம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக மூன்று முறை ஒன்றிய கழக செயலாளராக, நான்கு வருடம் மாவட்ட துணைச் செயலாளாக கட்சி பொறுப்பில் இருந்தவன் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு ஐந்து வருடத்திற்கு முன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாளிலிருந்து எதிர்க்கட்சிக்காரன், மாற்று கட்சிக்காரன் "எங்கள் கட்சிக்கு வந்து விடு! வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி தருகிறோம் !. காசு! பணம் ! பொறுப்பு! தருகிறோம்!" என ஆசை வார்த்தைகள் காட்டி அழைத்தார்கள். "அறிக்கை கொடு! எங்கள் மேடைகளில் பேசு" என்று சொன்னார்கள். "நான் செத்துப் போனாலும் போவேனே தவிர என்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய திமுகவை எதிர்த்து அறிக்கை விடுவதோ இன்னொரு கட்சியில் சேருவதோ என்னால் முடியாது" என்று 4 வருடம் பொறுமையாக காத்திருந்தேன்.

சென்ற வருடம் இதே நாளில் தலைவரும் இளைய தலைவரும் என்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். அந்த 4 வருடங்களில் நான் பட்ட அவமானம். கெட்ட மன அமைதி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போதும் நான் திமுகவிற்கு எதிராக பேசவோ எழுதவோ கட்சி மாறியோ போனவன் அல்ல. உண்மையான திமுக பேச்சாளன் அப்படித்தான் இருப்பான். "பனைமரம் ஏறி பதநீர் இறக்கி காய்ச்சி கருப்பட்டி வெல்லம் தயார் செய்து வாழுகின்ற உழைக்கும் தொழிலாளியான உடன்குடி தனபால், எங்கேயோ திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் மண்வெட்டி எடுத்து விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து ஜீவித்துக் கொண்டிருக்கிற தீக்கனல் கருணாநிதி சிறிய தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை வைத்து பிழைப்பு நடத்தும் உடுமலை தண்டபாணி போன்ற நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தொழிலாளிகளாக, உழைப்பாளிகளாக, சிறு வியாபாரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிற கழக உடன்பிறப்புகள் தான் பேச்சாளர்களாக இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தான் இந்த இயக்கத்தை வளர்த்தவர்கள், காத்தவர்கள். அவர்கள் கால் தூசி கூட பெற மாட்டாய் நீ ! அவர்கள் கொள்கை குன்றுகள். அந்தக் கொள்கை குன்றுகள் கூடி உயர்ந்து நிற்கும் மலையாக திமுக நிற்கிறது. நீ உதிரி மண் நீ மண் குதிரை. உன்னில் ஏறி எந்தக் கட்சிக்காரனும் சவாரி செய்ய முடியாது. நீ நிறம் மாறும் பச்சோந்தி உன்னைப் போன்ற கூடுவிட்டு கூடு பாயும் கட்சி மாறிகள் இல்லாத காலத்திலும் உறுதிமிக்க தொண்டர்களின் உழைப்பால் உதவியால் திமுக வென்று இருக்கிறது. உன்னைப் போன்றவர்களால் திமுக காயப்பட்டு இருக்கிறதே தவிர காப்பாற்றப்பட்டது இல்லை.

ஒரு நிருபர் பேட்டியில் உன்னைப் பார்த்து "காரி துப்பினால் ......." என்று கேட்டதற்கு "துடைச்சிக்குவேன் " என்று வெட்கமின்றி சொன்ன சுயமரியாதை இல்லாத மானம் கெட்டவன் நீ... உனக்கு இன்னும் எத்தனை கட்சிகள் காத்திருக்கிறதோ? இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+