“திமுக இப்போது ஒரு ஜாமீன்தார் கட்சி".. அதிமுக எம்.பி இன்பதுரை கிண்டல்!
சென்னை: "ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஜமீன்தார்கள் அதிகம் இருந்ததால் அதை ஜமீன்தார் கட்சி என்று அழைப்பார்கள்! அதுபோல திமுக ஜாமீன்தார் கட்சி! ஏறக்குறைய எல்லா அமைச்சர்களுமே நீதிமன்ற ஜாமினில் உள்ளதால் தற்போது திமுக ஜாமீன்தார் கட்சி!" என அதிமுக எம்.பி இன்பதுரை விமர்சித்துள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் பற்றிய சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாமீன் பெற்ற செய்தியை சுட்டிக்காட்டி அதிமுக எம்.பி இன்பதுரை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி வழக்கு
சென்னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூரு காடுகோடி பகுதியை சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூரில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 4 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
உதயநிதிக்கு ஜாமீன்
வெங்கடேஷ், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் வழக்கறிஞருடன் ஏற்கனவே ஆஜரான நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராகவில்லை. இதையடுத்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெங்களூர் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.1 லட்சம் பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கும் மனு மீதான விசாரணை முடிந்த பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தது.
செந்தில் பாலாஜி
அதேபோல, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தற்போது ஜாமீனில் உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.
இதையடுத்து சிறை சென்ற அவருக்கு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அடுத்த மூன்றாவது நாளே செந்தில் பாலாஜி வகித்த அதே இலாகாவுக்கு அவர் அமைச்சர் ஆனார். இதையடுத்து அவருக்கு கொடுக்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றம் விதித்த எந்த ஜாமின் நிபந்தனையும் அவர் மீறவில்லை என்று பதில் அளிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி ஜாமீன்
உங்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர் மனுதாரர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து உங்களுக்கு நாங்கள் ஜாமீன் வழங்கினோம். ஆனால், மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்று, நாங்கள் செய்தது தவறு என நீங்களே சொல்லி விட்டீர்கள். எனவே, பதவியா, ஜாமீனா? என்பதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. இதன் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தான், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ஐ.எஸ் இன்பதுரை, "ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஜமீன்தார்கள் அதிகம் இருந்ததால் அதை ஜமீன்தார் கட்சி என்று அழைப்பார்கள்! அதுபோல திமுக ஜாமீன்தார் கட்சி! ஏறக்குறைய எல்லா அமைச்சர்களுமே நீதிமன்ற ஜாமீனில் உள்ளதால் தற்போது திமுக ஜாமீன்தார் கட்சி!" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications