Exclusive: 12 அமைச்சர்களின் ஊழல்.. ஆளுநரை நம்புகிறோம்.. டி.கே.எஸ். இளங்கோவன் பரபர பேட்டி
சென்னை: 12 அமைச்சர்கள் ஒரு எம்எல்ஏ மீது ஆளுநரிடம் ஊழல் புகார்களைக் கொடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்க வேண்டியது அவரது கடமை என்று திமுக கூறியுள்ளது.
Recommended Video
தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை இரண்டாம் கட்டமாக கொடுத்திருக்கும் திமுக குழுவில் உள்ள அதன் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த நேர்காணல்...
கேள்வி : அதிமுக அமைச்சர்கள் மீது திமுக இரண்டாவது முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் புகார் கொடுத்திருக்கிறது. என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
பதில் : அமைச்சரவையில் இவ்வளவு ஊழல் நடக்கிறது, பல அமைச்சர்கள் நேரடியாக ஊழல்களில் ஈடுபடுகின்றனர், மக்கள் பணத்தை சுரண்டுகிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட மக்கள் சார்ந்த கோரிக்கையாக வேறு எதுவும் இருக்காது. அமைச்சர்களை நியமித்த வகையில் ஆளுநரிடம் புகார்களை ஆதாரத்துடன் அளித்துள்ளோம்.
கேள்வி : அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்தாலும் ஆளுநர் அதை செய்வார் என நம்பிக்கை இருக்கிறதா?
பதில் : ஆளுநர் என்ற பதவியில் இருக்கிறார். கடந்த முறை புகார் கொடுத்தோம். இந்த புகார்கள் என்பது எடப்பாடி பழனிசாமி, பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டு காலமாக, ஊழலை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இந்த ஊழல்கள் எல்லாவற்றையும் தொகுத்து நீதிமன்றம் சென்றோம். பின்னர் சிபிசிஐடியிடம் புகார் மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர் இலாகாவின் கீழே சிபிசிஐடி வருகின்ற காரணத்தினால், முதலமைச்சரை மீறி எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? எனவே, ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். ஆளுநர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே செய்துள்ளோம்.
கேள்வி : ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் கொடுத்த புகார் என்ன ஆனது?
பதில் : மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும், பதிலை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
கேள்வி :பேரறிவாளன் விடுதலைக்காக வைக்கப்பட்ட கோரிக்கையில் கூட காலதாமதம் செய்கிறார் ஆளுநர். திமுக புகாருக்கு அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா?
பதில் : தெரியவில்லை. ஏனென்றால், இப்போது நியமிக்கப்படுகின்ற ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி கட்சி சாராத நேர்மையுடனும், நடுநிலையுடனும் நடந்து கொள்ளக்கூடிய ஆளுநர்களாக நியமிக்கப்படவில்லை.
புதுச்சேரி, மேற்கு வங்கம், ராஜஸ்தானில் என்ன நடக்கிறது என்று பார்த்து வருகிறோம். பாஜக உறுப்பினர்களை போல நடந்து வருகிறார்களே தவிர, ஆளுநர் என்ற நிலைக்கு உயரவில்லை.
ஆளுநர் என்பவர் அம்மாநில மக்களுக்கும் அனைவருக்கும் பொதுவானவராக நடந்து கொள்ளவேண்டும் என்பதே எங்களது எதிர்ப்பார்ப்பு. அவர் அவ்வாறு நடந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் புகார் அளித்துள்ளோம்.
கேள்வி : தேர்தல் நெருங்கும் நிலையில் ஊழல் புகாரை கொடுப்பதற்கான காரணம் அதிமுக மீது மக்களுக்கு கெட்ட அபிப்பிராயத்தை ஏற்படுத்தவா?
பதில் : தேர்தல் நெருங்கும் நிலையில் புகார்களை கொடுக்கவில்லை. ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளோம். ஒராண்டுக்கு முன்னரே சிபிசிஐடியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். ஊழல் குறித்த விவரங்கள் 2018-ம் ஆண்டுக்கு பிறகுதான் கிடைத்தது. அதிகாரிகள் இந்த ஆட்சிக்கு அஞ்சுகிறார்கள். தேர்தலையொட்டி ஆளுநரிடம் செல்லவில்லை
கேள்வி : முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடுக்கப்பட்டாலும் பெரிய அளவிற்கான பாதிப்பு எதுவுமே அவர்களுக்கு ஏற்படாத போது, ஆளுநரிடம் அளித்திருக்கும் புகார் செல்லுபடியாகுமா?
பதில்: 1994-ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் அவர்களது சில அமைச்சர் மீதும் புகார்களை வழங்கியபோது ஜெயலலிதா உட்பட 5 அமைச்சர்கள் தண்டனை பெற்றனர். முறையாக செய்தால் நீதிமன்றம் அவர்களை தண்டிக்கும் என்பதற்கு தமிழகத்திலேயே 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியின் முதலமைச்சரும், 5 அமைச்சர்களும் சிறைக்கு சென்றது ஒரு சான்றாக உள்ளது.
கேள்வி : ஆட்சியை பிடித்து விடுவோம் என நம்பிக்கையில் இருக்கும்போது, ஆட்சிக்கு வந்த பின் நடவடிக்கை எடுக்கலாமே? எதற்காக ஆளுநரிடம் இப்படி புகார் அளிக்க வேண்டும்??
பதில் : இந்த ஆட்சியில் ஊழல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.. இன்றைக்கு கூட தனது உறவினர்களுக்கு டெண்டர்கள் விடுகிறார்கள். இறுதி நேரத்தில் முடிந்த வரை சுருட்டி கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலேயே சில நபர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். முதல் புகார் கொடுத்த ஒரு மாதத்திலேயே 2-வது புகார் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளி இருக்கிறார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு ஊழலில் ஊறியுள்ளார்கள் என்பதே நிருபணமாகிறது.
கேள்வி : இதுவரை எத்தனை அமைச்சர்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் அளித்துள்ளீர்கள்?
பதில் : ஆதாரப்பூர்வமாக விவரங்கள் கிடைத்த 12 அமைச்சர்கள் மீதும், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீதும் குற்றச்சாட்டுகள் அளித்துள்ளோம்.
கேள்வி : உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்னரும் அதிமுகவை 2016-ல் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளார்கள். மக்களுக்கு உங்கள் குற்றச்சாட்டுகள் புரிகிறதா?
பதில் : மக்களுக்கு எங்களது குற்றச்சாட்டுகள் புரிந்ததால்தான் 1996-ல் ஜெயலலிதாவை ஒருமுறை தோற்கடித்தார்கள். 2016ல் தேர்தலில் முறைகேடு நடைபெற்றது. அப்போது மத்தியில் உள்ள பாஜக ஆட்சி தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். வாக்குச்சாவடிகளில் 200 முதல் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் 20 இடங்களில் தோற்றுள்ளோம். நாங்கள் வெற்றி பெற வேண்டிய இடங்களில் சில தவறுகள் நடைபெற்று விட்டன. அது குறித்தும் புகார்கள் அளித்துள்ளோம் என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.