கும்மிடிப்பூண்டி வேணு மறைவு! எப்படி மறக்க முடியும்? பழைய நினைவலைகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளராக ஒரு காலத்தில் கோலோச்சியவரும், திமுக முக்கிய பிரமுகருமான கும்மிடிப்பூண்டி வேணு உடல் நலக் குறைவால் காலமானார்.
கும்மிடிப்பூண்டி வேணு மறைவுச் செய்தியறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், வேணு மாவட்டச் செயலாளராக இருந்த போது மாவட்டத்தை முழுவதுமாக வலம் வரவே ஓரிரு நாட்களாகும் என பழைய நினைவலைகளை பகிர்ந்துள்ளார். கும்மிடிப்பூண்டி வேணு குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது;

கழகத்தைக் கட்டிக்காத்த தீரர்: தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தைக் கட்டிக் காத்த தீரர் அருமைச் சகோதரர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டுத் துடிதுடித்துப் போனேன். எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்குச் சொந்தக்காரர் அவர். இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கமான மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சிறை ஏகிய போராளி அவர். மிசா சிறைவாசத்தில் என்னோடும், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களோடும் சிறையில் வாடியவர் அவர்.
கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான்: கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்று சொல்லுமளவுக்கு, அந்தத் தொகுதி மக்களிடமும் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இன்று இழந்து தவிக்கிறோம் என்று எண்ணுகையில் கண்களில் கண்ணீர் ததும்புகிறது.பரந்து விரிந்த ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்டக் கழகத்தின் செயலாளராக அவர் இருந்தபோது, அந்த மாவட்டத்தை முழுவதுமாக வலம் வரவே ஓரிரு நாட்களாகும். அந்த மாவட்டத்தில் இருந்த ஒவ்வொரு ஊரிலும் - வீட்டிலும் தனது காலடித் தடத்தைப் பதிய வைத்துவிட்டே வீடு திரும்புவார் அவர். இப்படி கழகப் பணிகளே தன் உயிர்மூச்சென வாழ்ந்த அவர், உடல் நலிவுற்று இருந்தபோதும் என்னைக் காண அண்ணா அறிவாலயம் வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
எந்நேரமும் கழகமே: ஒருமுறை மருத்துவமனையில் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தபோது, ஓய்வெடுக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவரோ, தான் விரைவில் நலம்பெற்று அடுத்த கழக நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வேன் என்றார். இப்படி எந்நேரமும் கழகமே அவரது சிந்தையில் நிறைந்திருந்தது.
இத்தகைய அர்ப்பணிப்புணர்வாலும் ஆற்றல்மிக்க அவரது செயல்பாடுகளாலும், கழகத்தின் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்து, ஒன்றியக் கழகச் செயலாளராக, மாவட்டக் கழகச் செயலாளராக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினராக என முத்திரை பதித்த அவரது உழைப்பும் தியாகமும் கழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் நிரம்பியிருக்கும்.
மனம் வாடுகிறேன்: கடந்த 2021-ஆம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் அவருக்குக் கலைஞர் விருது வழங்கி வாழ்த்தினேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமண விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைத்துப் பேசினேன். அதற்குள் அவரது மறைவுக்கு இரங்கல் சொல்லும் நாள் வந்துவிட்டதை எண்ணி மனம் வாடுகிறேன். கும்மிடிப்பூண்டி வேணு அவர்களது பிரிவால் வாடும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் - கும்மிடிப்பூண்டி தொகுதி வாழ் மக்களுக்கும் - அவரது குடும்பத்தினர்க்கும் - கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்ள முயல்கிறேன். கும்மிடிப்பூண்டி வேணு அவர்கள் என்றும் நம் நினைவுகளிலும் நெஞ்சங்களிலும் வாழ்வார்.












Click it and Unblock the Notifications