விஜய் முன்னாள் மேலாளர்னு சொல்லி திமுகவில் இணைந்தாரே செல்வக்குமார் அவர் யார் தெரியுமா? பரப்பும் தவெக
சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார் யார் என்பது குறித்து தவெகவினர் பரப்பி வருகிறார்கள். தான் விஜய்யின் முன்னாள் மேலாளர் என எதற்காக கூறிக் கொள்கிறார் என்பது குறித்தும் அவர் விமர்சித்துள்ளார்.
பி.டி.செல்வக்குமார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு வழக்கறிஞரும் கூட! பத்திரிகையாளராக தனது பணியை தொடங்கினார். பின்னர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இணைந்தார். இதையடுத்து அவர் விஜய்யின் மக்கள் நல அலுவலராக பணியாற்றினார். 2003ஆம் ஆண்டு டி.பி.கஜேந்திரனின் "பந்தா பரமசிவம்" படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் செல்வக்குமார்.

2012 ஆம் ஆண்டு நகுல், சிவா, சந்தானம், பிரேம்ஜி, பிரியாமணி ஆகியோரை கொண்டு ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் அந்த படம் எடுக்கப்படவில்லை. இதையடுத்து வினய் ராஜ், அரவிந்த் ஆகாஷ், சத்யன், பிரேம்ஜி, ராய் லட்சுமி ஆகியோரை வைத்து 2013 ஆம் ஆண்டு "ஒன்பதுல குரு" என்ற படம் இயக்கப்பட்டது.
ஆனால் இந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் 2015 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கிய "புலி" படத்திற்கு தயாரிப்பு பணிகளில் செல்வக்குமார் பணியாற்றினார். புலி படத்தின் தோல்வியால் செல்வக்குமார் தனிப்பட்ட முறையிலும் தோல்விகளை தழுவினார். அவரால் எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு "போக்கிரி ராஜா" என்ற படத்தை ரிலீஸ் செய்தார்.
"வசீகரா", "மதுர", "கஜினி", "ஆதி", "போக்கிரி", "ஆழ்வார்", "படிக்காதவன்" (தனுஷ்), "அழகிய தமிழ்மகன்", "வேல்", "வில்லு", "வேட்டைக்காரன்", "சுறா", "காவலன்" உள்ளிட்ட படங்களில் பிஆர்ஓ-வாக இருந்துள்ளார். "நாட்டாமை", "விஷ்ணு", "கோயமுத்தூர் மாப்பிள்ளை", "ஜெயில்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். "பந்தா பரமசிவம்", "ஒன்பதுல குரு" படங்களை இயக்கியும் "புலி", "போக்கிரி ராஜா" படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் கலப்பை இயக்கம் என்ற ஒரு அமைப்பைத் தொடங்கிய அவர், மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென நேற்று திமுகவில் இணைந்தார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் ஒரு விழா கொண்டாடப்பட்டது.
இதில் அந்த அமைப்பை சேர்ந்த 100 பேருடன் பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னதான் புகழ், பணம் என இருந்தாலும் சுற்றியிருப்போர் சரியாக அமையாவிட்டால் அவர்களை வேறு ஒரு திசைக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்பதை எனது வாழ்வில் நான் பார்த்துள்ளேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையையும் சுற்றியுள்ளவர்கள் கெடுத்தார்கள்.
பெயரை சொல்ல எனக்கு என்ன பயம் இருக்கிறது, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட்ராமன், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் இவர்கள் எல்லாம் தியாகிகள் கிடையாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் பி.டி.செல்வக்குமாரை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதாவது பிடி செல்வக்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்திருந்தார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கன்னியாகுமரி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 3109 வாக்குகளை பெற்றுள்ளார். கமல் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தவர் என்று சொன்னால் அது மரியாதையாக இருக்காது என்பதால் விஜய்யின் முன்னாள் மேலாளர் என சொல்லிக் கொள்கிறார்கள் என்று தவெகவினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications