மாஸ்டர் பிளானா.. அது சீக்ரெட் ஆச்சே.. பொடி வைத்து பேசும் டிஆர்பி ராஜா.. தயாராகும் திமுக ஐடி விங்!
சென்னை: திமுகவின் ஐடி பிரிவு செயலாளராக மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தனது வருங்கால திட்டங்கள் குறித்து அவர் ட்விட் செய்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். அவர் இந்த பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
கட்சி பணிகளையும், அமைச்சர் பதவியையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாது என்று காரணத்தால் இந்த ஐடி பிரிவு செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை பிடிஆர் கட்சி தலைமையிடம் அளித்தார்.
மேட்டரே வேற.. பிடிஆர் ரூமில் நுழைந்த ராஜா.. கட்டிப்பிடித்து வாழ்த்திய சீனியர்.. சபாஷ்
என்ன நடந்தது?
இதையடுத்து ஐடி பிரிவு செயலாளர் பொறுப்பு மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிற்கு வழங்கப்பட்டது. முன்னதாக திமுகவின் ஐடி விங் பிரிவு சரியாக செயல்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. சிறிய சிறிய கட்சிகள் கூட ஐடி விங் வைத்துள்ளனர். நிறைய டிரெண்ட்களை மேற்கொள்கிறார்கள். ஆனால் திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் ஐடி விங் சரியாக இல்லை என்று கட்சியினருக்கு மத்தியிலேயே கூட விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தது.
விமர்சனம்
முக்கியமாக திமுகவின் ஐடி விங் என்பது டேட்டா கலெக்ட் செய்யும் அமைப்பாகவே செயல்பட்டு வந்தது. அதாவது புள்ளி விவரங்களை சேகரிக்கும், வெளியிடும் அமைப்பாக திமுகவின் ஐடி விங் செயல்பட்டது. இதில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல நாட்களாக முயன்று கடைசியில் தற்போது ஐடி பிரிவு செயலாளராக டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பாக இணையத்தில் தீவிரமாக செயலாற்ற கூடியவர் டிஆர்பி ராஜா.
டிரெண்ட்
டிரெண்டிங், மீம் என்று இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர் டிஆர்பி ராஜா. இந்த நிலையில் இவரின் வருகையால் திமுகவின் ஐடிவிங்கில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட ஐடி விங் பதவி குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த டிஆர்பி ராஜா, தற்போது நம்மிடம் இருக்கும் கட்டமைப்பை முழுமையாக அறிந்துகொண்டு விரைவில் புதிய முயற்சிகள் துவங்கும். கடந்த சில தினங்களாக பலர் உங்களது ஆலோசனைகளை அளித்துள்ளீர்கள் கவலை வேண்டாம்,தங்களோடு இணையத்தில் களம் கண்டவன் என்ற முறையில் தங்களுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் எனக்கும் உண்டு. பொறுத்திருங்கள்.. என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரகசியம்
அதாவது திமுக ஐடி விங்கில் முக்கிய மாற்றங்களை விரைவில் கொண்டு வருவேன் என்று டிஆர்பி ராஜா குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து இணையத்தில் பலர் டிஆர்பி ராஜா என்ன மாற்றம் கொண்டு வர போகிறார் என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அவரிடம் ஏதோ மாஸ்டர் பிளான் இருக்கிறது போல என்றும் ஆளுநர் தரப்பினர் சிலர் ட்விட் செய்து இருந்தனர். இந்த நிலையில்தான் திமுகவினர் கேள்விக்கு டிஆர்பி ராஜா பதில் அளித்துள்ளார். அதில், எல்லோரும் கெட் ரெடி.. அடுத்த மாசம் டேட்டா பேக் போட்டு தயாரா இருங்க, என்று குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்டர் பிளான்
இன்னொரு ட்விட்டில் மாஸ்டர் பிளான் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், மாஸ்டர் பிளானா.. அது சீக்ரெட் ஆச்சே.. ஆனால் உங்க கிட்ட மட்டும் சொல்றேன். அடிமைகளை அடிக்கிறோம்.. சங்கிகளை ஓயாம அடிக்கிறோம்.. இதுதான் மாஸ்டர் பிளான் ஓகேவா, என்று கிண்டலாக குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக திமுகவில் ஐடி விங்கில் பெரிய மாற்றம் வருவதாக தகவல்கள் வந்தன. அதாவது புதிய டீம் களமிறக்கப்பட உள்ளதாகவும், பல பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.