விஜய் சட்டையில் ரத்தக்கறை.. இன்னையோட 20 நாள் ஆச்சு! இன்னும் கரூர் போகாதது ஏன்? விளாசிய திமுக
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார் என சொல்லப்பட்டாலும், இதுவரை செல்லவில்லை. மேலும், அதற்கான ஏற்பாடுகளும் நடக்கவில்லை. இந்நிலையில் கரூர் துயரம் நடந்து இன்றோடு 20 நாட்கள் ஆகிவிட்டது, ஆனால், இன்று வரை விஜய் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை, அவர்களுக்கு நிவாரணத் தொகையைக் கூட வழங்கவில்லை என திமுக ஐடி விங்க் கடுமையாக விமர்சித்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த துயர சம்பவம் நடைபெற்றது செப்டம்பர் 27-ஆம் தேதி. இன்றோடு 20 நாட்கள் கடந்த விட்டது.
கரூர் துயரம் நடந்த பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் உடனே குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். ஆனால் நடிகரும் தவெக தலைவருமான விஜய் இதுவரை நேரில் செல்லவில்லை.

விஜய் கரூர் துயரம்
ஆரம்பத்தில், விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கத் திட்டமிட்டார் எனத் தகவல் வெளியானது. இதற்காக, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டு, கரூர்-ஈரோடு சாலையில் உள்ள கேஆர்வி மெரிடியன் ஹோட்டலில் நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஹோட்டல் கூட்ட நெரிசல் நடந்த இடத்திற்கு அருகில் இருப்பதால், போலீசார் பாதுகாப்பு காரணங்களால் இடத்தை மாற்ற அறிவுறுத்தினர். இதனிடையே, திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் யாரும் நிகழ்ச்சிக்காக இடம் வழங்க முன்வராததால், விஜய்யின் வருகை ஒத்திவைக்கப்பட்டதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
விஜய் வருகை தாமதம்
மேலும், விஜய் கரூர் வருகை குறித்து தகவல் பரவியதும், பெரும் ரசிகர் கூட்டம் திரள்வது உறுதி என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிக்கல்கள் எழுந்தன. இதனால், நிகழ்ச்சி இடம் உறுதி செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. தற்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இடத் தேர்வு முடிவடையாததால் விஜய்யின் கரூர் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் வட்டாரங்கள், "விஜய்யின் வருகை தீபாவளிக்குப் பிறகே இருக்கக்கூடும்" எனத் தெரிவித்துள்ளன.
திமுக ஐடி விங்
இந்நிலையில் கரூர் துயரம் நடந்து இன்றோடு 20 நாட்கள் ஆகிவிட்டது, ஆனால், இன்று வரை விஜய் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை, அவர்களுக்கு நிவாரணத் தொகையைக் கூட வழங்கவில்லை என திமுக ஐடி விங்க் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில்," இன்றோடு 20 நாட்கள் ஆகிவிட்டது, ஒரு கட்சி கரூரில் வெற்று விளம்பரத்திற்காக கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற வெறியில் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் தற்குறித்தனமாக செயல்பட்டதால் ஒரு பெருந்துயரம் ஏற்பட்டு.
கரூர் உயிரிழப்பு
அவரைப் பார்க்க வந்து உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களை இன்று வரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை, அவர்களுக்கு நிவாரணத் தொகையைக் கூட வழங்கவில்லை. இந்த கள்ள மௌனம் என்பது உயிரிழந்த குடும்பத்தாரை அவமதிக்கும் செயல். இன்னும் நேரம் கிடைக்கவில்லையா அல்லது ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லையா அல்லது மனிதாபிமானம் என்பது அக்கட்சியின் அகராதியிலேயே இல்லையா? இல்லை தன் ரசிகர்களிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டி கோரிக்கை வைத்துவிட்டு அனுமதி கிடைக்கவில்லை என்று உருட்டிய அதே உருட்டை மீண்டும் உருட்ட போகிறீர்களா?" என விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications