சிலிண்டரை இப்படியெல்லாமா பயன்படுத்துவாங்க?.. திமுக பிரமுகர் போட்ட போட்டோ.. "பற்றி எரியும்" ட்விட்டர்!
சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்த்தப்பட்டதை கண்டித்து திமுக பிரமுகர் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலையை கச்சா எண்ணெயின் சந்தை விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன.

எரிவாயு சிலிண்டர் விலை
கடந்த மே மாதம் சென்னையில் ரூ 825 க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகு பல முறை சிலிண்டர் விலை உயர்ந்தது. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிலிண்டர் விலை ரூ 17 உயர்ந்து ரூ 917.50 க்கு விற்பனையானது. நவம்பர், டிசம்பர், ஜனவரி 2022, பிப்ரவரி மாதங்களில் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 917.50 க்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர்
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் கேஸ் சிலிண்டர் விலை உயராமல் இருந்து வந்தது. அது போல் பெட்ரோல் டீசல் விலையும் உயராமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த நான்கரை மாதங்கள் கழித்து வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ 50 உயர்ந்தது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை
சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ 967.50 க்கு விற்பனையானது. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் வேலை இழப்பையும் ஊதியக் குறைப்பையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சிலிண்டர் விலையால் விறகு அடுப்புக்கே மாறும் சூழல் எழுந்துள்ளது.

திமுக பிரமுகர் போட்ட ட்வீட்
இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து கார்த்திகேய சிவசேனாதிபதி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் சமையலறையில் விறகு வைத்து அடுப்பை பற்ற வைத்துவிட்டு நீளமாக உள்ள விறகிற்கு முட்டுக் கொடுக்க சிலிண்டரை வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications