வாரியத் தலைவர் பதவி மீது கண்... சென்னையில் டேரா... பவர் சென்டர்களை சுற்றி வரும் திமுக நிர்வாகிகள்..!
சென்னை: வாரியத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்காக திமுக முன்னணி நிர்வாகிகள் பலரும் சென்னையில் முகாமிட்டு அக்கட்சியின் பவர் சென்டர்களை சுற்றி வரத் தொடங்கியுள்ளனர்.
எம்.எல்.ஏ., எம்.பி. சீட் கிடைக்காத திமுக முன்னணி பிரமுகர்கள் தான், வாரியத் தலைவர் பதவிகளுக்கான ரேஸில் குதித்திருப்பவர்கள்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் மூலம் அவர்கள் காய் நகர்த்த தொடங்கியுள்ளனர்.
எங்கு போட்டி..? நீங்களே பேசி சுமூக முடிவெடுங்கள்.. மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை ஃப்ரீடம்..!
திமுக அரசு
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து அரசாங்கம் நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்காக காத்திருந்த அக்கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் இப்போது ஆட்சியின் மூலம் தங்களுக்கான பலனை அறுவடை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த முயற்சியை யாரும் தவறு என்று கூற முடியாது. 10 ஆண்டுகளாக கட்சிக்காக காசு செலவழித்து, உடல் உழைப்பை கொட்டி கழகம் வளர்த்தவர்களுக்கு திமுக ஆட்சியில் பதவியை எதிர்பார்க்க நூறு சதவீதம் தகுதியுண்டு.
போட்டா போட்டி
ஆனால் இங்கு இருக்கும் பிரச்சனையே வேறு. ஒரு பதவிக்கு இரண்டு பேர் மூன்று பேர் போட்டிபோட்டால் சரி, 50 பேர் அல்லவா போட்டி போடுகிறார்கள். உதாரணத்துக்கு காலியாக உள்ள 2 மாநிலங்களவை பதவிக்கு 50-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்துவிட்டு காத்திருந்தனர். 50 பேர் கடிதம் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக அந்த ஐம்பது பேரையும் ஸ்டாலினால் எம்.பி.க்களாக ஆக்கிவிட முடியாது. வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்கள் நீங்கலாக ஏமாற்றம் அடைந்த மற்றவர்களை அரவணைத்து அடுத்தடுத்து வாய்ப்பு கொடுக்க வேண்டிய கடமை கட்சி தலைமைக்கு ஏற்படும்.
வாய்ப்பு கிடைக்காதவர்கள்
அந்த வகையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பலரும் இப்போது வாரியத் தலைவர் பதவியையாவது கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இதற்காக ஆளாளுக்கு ஒரு பவர் சென்டர்களை சுற்றி வந்து காய் நகர்த்தி வருகின்றனர். சமூக நல வாரியம், வீட்டு வசதி வாரியம், ஆவின் சேர்மன், தமிழ்நாடு நூலகப் பிரிவு தலைவர், தென்னை விவசாயிகள் நல வாரியம், என பல்வேறு வாரியங்களுக்கு அடுத்தடுத்து தலைவர் பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
உள்ளாட்சித் தேர்தல்
இதனை எப்படியும் பெற்று விட வேண்டும் என்பதற்காக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர் வாரியத் தலைவர் பதவியிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.