ரேஷன் கடைகளில் மீண்டும் உளுத்தம் பருப்பு.. கூடுதல் சர்க்கரை.. திமுகவின் அட்ராசக்கை அறிக்கை
சென்னை: ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு, கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழககத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த ஐந்து முனை போட்டியில் தேமுதிக இருக்கிறதா இல்லை 6ஆவது கட்சியாக போட்டியில் இருக்குமா என தெரியவில்லை.
இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்கள். அது போல் தேர்தல் அறிக்கையும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த வகையில் இன்றைய தினம் திமுக தேர்தல் அறிக்கை வெளியானது.
இதில் நடுத்தர, ஏழை எளிய மக்களை கவரும் பல திட்டங்களை திமுக அறிவித்துள்ளது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் தற்போது வழங்கி வரும் துவரம் பருப்புடன் உளுத்தம் பருப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது குறைந்தபட்ச ஒரு கிலோ சர்க்கரை ரேஷன் கடைகளில் வழங்கி வரும் நிலையில் அதை கூடுதலாக ஒரு கிலோ உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அது போல் சிலிண்டர் விலையில் ரூ 100 மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.