நேற்று முளைத்த காளான் விஜய்.. களத்துக்கு வாங்க.. ஒரே அடிதான்.. அமைச்சர் சேகர்பாபு சரமாரி பதிலடி!
சென்னை: நேற்று முளைத்த காளான்களுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக அமைச்சர் சேகர்பாபு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

விஜய்க்கு சேகர்பாபு பதில்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு ஏற்பாடு செய்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், முதல்வர் டெல்லி சென்றது, ரெய்டுகளில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகதான் என விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு நிதி ஆயோக் கூட்டத்திற்காக சென்றார். அங்கும் மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் கல்வி நிதியை விடுவித்தல், மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை அதிகரித்தல் உள்ளிட்ட மாநில அரசின் நலன்களுக்காக வலியுறுத்தினார்.
ஆட்சியையே துறந்த வரலாறு கொண்டது திமுக
கொரோனா தொற்று, கலைஞரின் நினைவு நாள் முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆகிய காரணங்களால் முன்பு பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் குறிப்பிடப்படாததால் கூட்டத்தைப் புறக்கணித்தார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டதை மீட்டெடுக்க முதல்வர் ஸ்டாலின் இந்த முறை வலியுறுத்தி உள்ளார்.
எங்களுக்கு மடியில் கனமில்லை. மற்ற கட்சிகளை போல சுற்றி வந்து பாஜகவோடு கள்ள உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. முதல்வர் பயமற்றவர். ஆதரிப்பதையும் எதிர்ப்பதையும் வெளிப்படையாகச் செய்யும் தலைவர். திமுக, மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்து ஆட்சியைத் துறந்த வரலாறு கொண்டது. நெருக்கடி நிலையின்போது மிசா சட்டத்தின் கீழ் கொடுஞ்சிறை அனுபவித்த போதும் பின்வாங்காமல் உறுதியாக நின்ற இயக்கம் திமுக.
நேற்று முளைத்த காளான்
ஆனால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்லத் தயாரில்லை. அவர்கள் களத்திற்கு வரட்டும். அவர்கள் எந்த வகையில் அடிக்கிறார்களோ, அதை விட 100 மடங்கு வலுவாக ஒரே அடியில் பிடறி சிலிர்க்கும் விதமாக அடிக்க திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. அடுத்த தேர்தலிலும் திமுகவுக்கு மகுடம் சூட்ட அமர வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். விஜய்யின் அறிக்கைகள் கடற்கரையில் கட்டிய மணல் கோட்டை போல தகர்க்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் அட்டாக்
முன்னதாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில், "என்றைக்கு இருந்தாலும் அமலாக்கத் துறை நடவடிக்கை காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் டெல்லி சென்றுள்ளார். பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும். அந்தப் புகைப்படத்தில், பா.ஜ.க.வுடன் வெளிப்படையான கூட்டணியில் இருக்கும். இது சாதாரண நிகழ்வு போலத் தோற்றம் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், தி.மு.க. பா.ஜ.க. இடையிலான மறைமுகக் கூட்டும் பேர அரசியலும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது.
சரணாகதி
எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல். தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளை அடித்து. அவர்களிடம் நெடுஞ்சாண்கிடையாகத் திமுக சரணாகதி அடைந்துள்ளது." எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications