திமுக அமைச்சர்கள் பேச்சால் வேதனை.. முதல்வர் கவனத்திற்கு போயுள்ளது.. சொல்வது திருமாவளவன்
சென்னை: திமுக அமைச்சர்களின் பேச்சுகள் வேதனை அளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
அந்த வீடியோவில், "உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்" என்று பேசி இருக்கிறார்.

அதிமுக கண்டனம்
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை 'ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்' என்று அமைச்சர் பொன்முடி கூறியதற்கு அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கேஎன் நேரு உள்ளிட்ட அமைச்சர்களும் மக்களை அவமதித்து வருவதாக அதிமுக தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.

திருமாவளவன்
இந்த நிலையில் சென்னை துறைமுகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், அக்.2 காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல. மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது.

விசிக பேரணிக்கு தடை
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அறப்போராட்டத்துக்குத் தடை விதித்திருப்பது எவ்வகையில் ஞாயம் என்னும் கேள்வி எழுகிறது என்று தெரிவித்தார்.

திமுக அமைச்சர்கள் பற்றி கருத்து
தொடர்ந்து திமுக அமைச்சர்களின் பேச்சு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் போது, சில அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள். அந்த பதில்கள் விமர்சனத்துக்குரியவையாக இருக்கின்றன. சில சமயங்களில் வருத்தத்தை, வேதனையை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. இவை ஏற்புடையது அல்ல. இது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications