எளிமையாக நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ. வீட்டுத் திருமணம்... 50 பேருக்கு மட்டுமே அழைப்பு..!
சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மகன் திருமணத்தை தனது இல்லத்தில் நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் பழனியாண்டி. தனது கல்லூரிக் காலம் முதல் திமுகவில் மிகத் தீவிரமாக பணியாற்றி வரும் இவர், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

தொடக்கக்காலத்தில் மாவட்ட அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுடன் மல்லுக்கு நின்று அரசியல் செய்து வந்த இவர், அண்மைக்காலமாக அவருடன் ஒன்றிணைந்து அரசியல் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் விமலாதித்தனுக்கு இன்று திருமணம் நடத்த தேதி நிச்சயிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்பே முதலமைச்சர் ஸ்டாலினிடம் தேதி கேட்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போது வெளிமாவட்ட நிகழ்ச்சிகளுக்கு தேதி கொடுக்க மாட்டார். இதனால் திருமணத்தை சொந்த ஊரான திருச்சியில் நடத்துங்கள், வரவேற்புக்கு வருகிறேன் என பழனியாண்டி எம்.எல்.ஏ.விடம் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அதனை திடமாக மறுத்த பழனியாண்டி எம்.எல்.ஏ., தனது மகன் திருமணத்தை நீங்கள் தான் தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் மாங்கல்யத்தை ஆசிர்வதித்து எடுத்துக்கொடுக்க வேண்டும் எனவும் உருகிக்கேட்டிருக்கிறார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் எளிமையாக திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன் படி மிகவும் நெருங்கிய உறவினர்கள் 50 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு, மிக எளிய முறையில் எம்.எல்.ஏ.வீட்டுத் திருமணம் இன்று காலை நடைபெற்று முடிந்துள்ளது. இதனிடையே நாளை மறுநாள் 12-ம் தேதியன்று திருச்சியில் வரவேற்பு விழாவை நடத்தில் அதில் நண்பர்கள், கட்சிக்காரர்கள் என பல தரப்பட்டோரையும் அழைத்து விருந்து கொடுத்து அசத்தவுள்ளார் பழனியாண்டி.
பழனியாண்டி எம்.எல்.ஏ. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் மட்டும் கலந்துகொண்டனர். இதனிடையே தனது மகன் திருமண விழா மற்றும் வரவேற்பு விழாவை வாழ்த்துவதாக கூறி கட்சியினர் யாரும் போஸ்டரோ, பேனரோ வைக்கக்கூடாது என்றும் கட்சித் தலைமையின் உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும் அன்புக் கட்டளையிட்டுள்ளார் பழனியாண்டி எம்.எல்.ஏ.












Click it and Unblock the Notifications