கொரோனா பாதிப்பு.. திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள்.. முக ஸ்டாலின்
சென்னை: கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பிரச்சனையால் வேலையை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து ஏராளமான மக்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு உதவிடுவதற்காக திமுக சார்பில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் பரவலால் பாதித்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசும் உடனே போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும், இந்த மனிதநேய முயற்சியில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தியதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
கொரோனா தொடர்பாக மத்திய மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இன்று போல் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி மிகுந்த விழிப்புணர்வுடனும் சுய சுகாதாரத்தைக் கடைபிடித்தும், கொரோனா தொற்று நோய் பரவலை முழுயைமாக தடுத்திடவும் வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications