ரூ. 1050 கோடி வரி ஏய்ப்பு புகார்.. ஐடி ரெய்டில் வெளிவந்த ஷாக் ரிப்போர்ட்.. ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்
சென்னை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வரும் சனிக்கிழமை ஆஜராகுமாறு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அரக்கோணம் தொகுதி திமுக எம்பியும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஜெகத்ரட்சகன் கல்லூரிகள், மருத்துவமனை, சொகுசு விடுதிகளை நடத்தி வருகிறார் என சொல்லப்படுகிறது. இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் பெற்ற வருவாயை முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 5 ஆம் தேதி முதல் ரெய்டு நடத்தி வந்தனர். 5 நாட்களாக நடந்து வந்த ரெய்டு தற்போதுதான் முடிவுக்கு வந்தது.
ஜெகத்ரட்சகனின் வீட்டில் ரகசிய அறை இருக்கிறதா என ஜன்னல்கள், கதவுகள் பின்புறம் அதிகாரிகள் தட்டி பார்த்தனர். அது போல் அவருக்குச் சொந்தமானதாக கூறப்படும் சொகுசு கார்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சவிதா மருத்துவ கல்லூரியிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இங்கு கணக்கில் வராத 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அது போல் ஜெகத்ரட்சகன் வீட்டில் ரூ .1.50 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவருடைய மகள் ஸ்ரீநிஷாவுக்கு சொந்தமான நிறுவனத்திலும் கட்டுகட்டாக பணம், வெளிநாாட்டு கரன்சிகள், 7 வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களுக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள கணினிகள், லேப்டாப்புகளில் ஏதேனும் சாப்ட்வேரில் கணக்குகளை மறைத்து வைத்திருக்கின்றனரா என சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 4.5 கோடி ரூபாய் பணம், 2.7 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. வெளிநாட்டு கடிகாரங்களின் மதிப்பு மட்டும் ரூ 2.45 கோடி இருக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்த நிலையில் ஜெகத்சரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து சோதனை முடிவுற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைப்பற்றப்பட்ட ரொக்க பணம், நகைகள் முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறையினர் எடுத்துச் சென்றனர். இந்த நிலையில் வரும் சனிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சோதனையில் ஜெகத்ரட்சகன் லட்சுமி அம்மாள் அறக்கட்டளை மூலம் ரூ 1050 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்துள்ளன.












Click it and Unblock the Notifications