திருநாவுக்கரசர் கேட்க வேண்டியதை... திமுக எம்.பி. கேட்டிருக்கிறார்... புதுக்கோட்டை பவர் பாலிடிக்ஸ்..!
சென்னை: புதுக்கோட்டைக்கு கொண்டுவர வேண்டிய ரயில்வே வசதிகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மேற்கொள்ளாத பணிகளை திமுகவின் புதிய எம்.பி.யான எம்.எம்.அப்துல்லா முன்னெடுத்திருக்கிறார்.
புதுக்கோட்டையை உள்ளடக்கிய திருச்சி தொகுதியின் எம்.பி.யான திருநாவுக்கரசர் விடுக்க வேண்டிய கோரிக்கைகளை எல்லாம் புது எம்.பி.யான அப்துல்லா முன் வைத்து வருகிறார்.
இது புதுக்கோட்டை மாவட்ட திமுக -காங்கிரஸ் பிரமுகர்களிடையே பேசுப் பொருளாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இருக்கும் தனிச்சிறப்பு என்னவென்றால், அந்த ஊர் மக்களுக்கு இரண்டு அமைச்சர்கள், இரண்டு எம்.பி.க்கள் இருக்கிறார்கள். புதுக்கோட்டை நகரை உள்ளடக்கிய திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களவை உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர். அரசியலில் நீண்ட அனுபவம் உடையவர், தொகுதிப் பிரச்சனைகளை தனக்கிருக்கும் பரந்து விரிந்த தொடர்புகள் மூலம் உடனடியாக சரிசெய்துவிடக் கூடியவர் என இவருக்கு ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் அந்த இமேஜை கேள்விக் குறியாக்கியுள்ளது.

பவர்ஃபுல் மனிதர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு காலத்தில் பவர்ஃபுல் மனிதராக வலம் வந்த திருநாவுக்கரசர், காலப்போக்கில் தனது அரசியல் செயல்பாடுகளை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டார். இதனால் இவர் மீது பட்ட புகழ் வெளிச்சமும் குறையத் தொடங்கியது. இந்நிலையில், புதுக்கோட்டையை பூர்விகமாக கொண்ட எம்.எம். அப்துல்லா என்பவர், அண்மையில் திமுக சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக உள்ளார். திருநாவுக்கரசர் தனது திறமையை வைத்து இத்தனை நாட்களாக புதுக்கோட்டைக்கு செய்து முடித்திருக்க வேண்டிய பணிகளை, இப்போது புது எம்.பியான அப்துல்லா முன்னெடுத்துள்ளார்.

சுற்றுப்பயணம்
அந்த வகையில் அயோத்தி எக்ஸ்பிரஸ் புதுக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும், பாலக்காடு -திருச்சி ரயிலை காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், பாரம்பரிய பின்னணி கொண்ட புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஏ.டி.எம். இயந்திரம் அமைக்க வேண்டும், குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ரயில்வே நிலைக்குழு
எம்.பி. என்கிற முறையில் இதை தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் அவரே கூட நேரில் வழங்கியிருக்கலாம், ஆனால் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நாட்கள் ஆகக்கூடும். இதனால் ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் டி.ஆர். பாலு இன்று தென்னக ரயில்வே அலுவலகத்துக்கு ஆய்வுக்கு செல்வதை அறிந்து அவர் மூலம் புதுக்கோட்டைக்கான ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

அவரிடத்தில் இவர்
திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தன்னிடம் கொடுத்தனுப்பிய கோரிக்கை கடிதத்தை தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸிடம் வழங்கிய டி.ஆர்.பாலு, இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சீனியர் அரசியல்வாதியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் நினைத்திருந்தால் தனது தொகுதிக்குள் வரும் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு என்னென்னமோ, எப்போதோ செய்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications