செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம்.. வீட்டில் அடைத்து வைத்தார்கள் - திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவன் பரபர
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும், எந்த விதிகளையும் அமலாக்கத்துறை பின்பற்றவில்லை எனவும் திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வந்த திமுக எம்பியும் வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேற்று காலை 7 மணியில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவருடைய இல்லத்திற்கு சோதனை என்று சொல்லி அமலாக்கத்துறையில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் இன்று காலை இரண்டேகால் மணி வரை அவரை விசாரணை என்ற பெயரில் வீட்டுக்கு உள்ளேயே அடைத்து வைத்தனர்.

அவரை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. அவருடைய உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களை அனுமதிக்காமல் இரவு 2.15 மணியளவில் எந்தவிதமான காரணமும் சொல்லாமல் கைது செய்கிறோமா, அல்லது எங்கே எடுத்துபோகிறோம் என்று சொல்லாமல் அதிகாரிகள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அவர் கைது செய்யப்பட்டு உள்ளாரா? அல்லது கைதுக்கான காரணங்க என்ன என்று எதையும் தெரிவிக்கவில்லை. இதற்கு பிறகுதான் அமலாக்கத்துறை என்ன செய்யப்போகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதன் பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்கள் பரிசோதனை செய்துகொண்டு இருக்கிறார்கள். அதன் பிறகே உடல் நிலை பற்றி தெரியும்.
அமைச்சர் என்று இல்லை.. இந்திய குடிமகன் யாரையும் கைது செய்வதற்கு என்று இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அந்த வழிமுறைகளில் எதுவும் இந்த கைது நடவடிக்கையில் பின்பற்றதாக தெரியவில்லை. அங்கு இருந்த யாரும் கைதுக்கான காரணத்தை சொல்லவில்லை.
அதற்கு பிறகு அவசியமாக இந்த குற்றம் 7 ஆண்டுக்குள் தண்டிக்கப்பட வேண்டியதாகும். எனவே பிரிவு 41/7இன் கீழ் சம்மன் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதுபோல் எந்த சம்மனும் அளிக்கப்படவில்லை. காலை 7 மணி முதல் மறுநாள் விடியற்காலை 2 மணி வரை அடைத்து வைத்து அழைத்து வந்து இருக்கிறார்கள்.
எனவே இந்த கைது நடவடிக்கை என்பது இந்திய குற்றவியல் சட்டத்துக்கு எதிராகவும், இந்திய அரசியலமைப்புக்கு எதிரானதாகும். எந்த அதிகாரியும் சட்டத்துக்கு மீறியவர் அல்ல. இந்தியாவின் சட்டத்துக்கு கீழ் உள்ளவர்தான். எதற்காக கைது செய்தார்கள் என்பதை பொறுத்தே அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எந்த விதிகளையும் பின்பற்றியதைபோல் தெரியவில்லை.
எந்த வழக்குக்காக விசாரித்து இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. நகல்களை பெற்றுக்கொண்ட பிறகுதான் தெரியும். அமைச்சருக்காக நான் தான் ஆஜராகப்போகிறேன்.” என்று தெரிவித்தார். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications