“புகைச்சல்”.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! அப்செட்டான திமுக எம்பி செந்தில்குமார் - ஓபனாக விமர்சனம்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதற்கு திமுக எம்பி செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்து வெளிப்படையாகவே ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் திமுக இளைஞரணி மாவட்ட - மாநகர அமைப்பாளர் / துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
பெரியார் - அண்ணா - கலைஞர் - பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித்து நம் கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவர் பதிவிட்டு இருந்த திமுக இளைஞரணி அறிவிப்பில், "கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், கழக மாவட்டம், மாநகரங்களுக்கான இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்களிடம் மண்டல வாரியாக நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டன.
நேர்காணல் முடிவு மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரை ஆகியவற்றின் அடிப்படையில் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு இளைஞர் அணிக்கு கீழ்க்கண்டவாறு மாவட்ட, மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்." என்று குறிப்பிட்டு திமுக நிர்வாக மாவட்டங்களின் வாரியாக புதிய நிர்வாகிகளின் பட்டியலை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி, தலா ஒரு மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களின் பெயர்களை திமுக நிர்வாக மாவட்டங்களின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் இளைஞரணி நிர்வாகிகள் தேர்வில் கட்சிக்கு உள்ளேயே அதிருப்தி கிளம்பி இருக்கிறது.
அந்த வகையில் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே பதிவிட்டு உள்ளார் தருமபுரி தொகுதி திமுக எம்பியான செந்தில்குமார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "இளைஞர் அணி பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன்.
தர்மபுரி மாவட்ட அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போல் நடந்துவிடக்கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை." என அவர் தெரிவித்து இருக்கிறார். திமுக எம்பியின் இந்த பதிவு கட்சிக்கு உள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications