அதிமுக பாஜக ஒரே கூட்டணியில்? திமுக எம்பி வில்சன் புகார்.. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விளக்கம்
சென்னை: அதிமுகவில் உள்ள "பாஜக ஆதரவு தரப்பு" தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பதாகவும், இதன் மூலம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை உடைப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் திமுக-அதிமுக கூட்டணி பொய் என்றார். விஜய்யின் கூட்டணியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு முரண்பட்ட கட்சிகளும் ஒரே அணியில் சேரப் போகிறதா? என்று கேள்வியும் வில்சன் எழுப்பினார். இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், பி. வில்சனின் வாதம் முற்றிலும் தவறானது. காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்பதைத் திட்டவட்டமாக கூறினார்..
திமுக ராஜ்யசபா எம்பி வில்சன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், அதிமுகவில் உள்ள "பாஜக ஆதரவு தரப்பு" தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பதாகவும், இதன் மூலம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை உடைப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் திமுக-அதிமுக கூட்டணி பொய் என்றார். தனது செயல்களை நியாயப்படுத்த எடப்பாடி தரப்பு "அதிமுக-திமுக ரகசியக் கூட்டணி" என்ற பொய்யான கதையைப் பரப்புவதாகவும் வில்சன் குற்றம்சாட்டினார்.

மேலும் விஜய்யின் கூட்டணியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு முரண்பட்ட கட்சிகளும் ஒரே அணியில் சேரப் போகிறதா? என்று கேள்வியும் வில்சன் எழுப்பினார். மேலும் "விஜய் வாக்குறுதி அளித்த மாற்றம் இதுதானா?" என்று கேட்டதுடன், மக்களின் ஆணையை இவர்கள் கேலி செய்வதாகவும் திமுக எம்பி வில்சன் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், "தற்போது நிலவும் அரசியல் சூழலில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய எதார்த்த நிலை இதுதான்..
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களைப் பெற்று, தவெக மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் வெறும் 10 இடங்களே தேவை என்ற நிலையில் விஜய் அவர்கள் மிகத் தெளிவாகச் செயல்பட்டார். விஜய் அவர்கள் 5 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட காங்கிரஸ், தலா 2 இடங்களைக் கொண்ட சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய ஐந்து மதச்சார்பற்ற கட்சிகளை மட்டுமே அணுகி ஆதரவு கோரினார். இந்த மதச்சார்பற்ற முன்னணி தற்போது அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டி பலமாக உள்ளது. அமமுக சட்டமன்ற உறுப்பினர் அறிவித்த ஆதரவு என்பது அவராக விரும்பித் தந்தது. அதனை தவெக கோரவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எதார்த்தம் என்னவென்றால், விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்பதைத் தடுக்கவே பாஜக வரிந்து கட்டிக்கொண்டு நின்றது. இது எனது நண்பர் வில்சனுக்கு நன்றாகவே தெரியும், காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைத்தது கிடையாது. எனவே, காங்கிரஸும் பாஜகவும் ஒரே அணியில் இருப்பதாகச் சொல்வது முற்றிலும் தவறானது மற்றும் மக்களைத் திசைதிருப்பும் செயலாகும். அதேபோல், முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒருபோதும் பாஜக அல்லது அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை. இப்போது அதிமுக-விற்குள்ளேயே இருக்கும் பிரிவினைகள் பகிரங்கமாக வெளிவரத் தொடங்கிவிட்டன.
சி.வி. சண்முகம் அவர்கள் திமுக-அதிமுக இடையேயான எந்தவிதமான புரிதலையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். அவர் தற்போது என்.டி.ஏ பாதையிலிருந்து விலகி, அதிமுக உட்கட்சி அரசியலில் தனது சொந்தப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார். கற்பனையான கதைகள் உண்மையாகிவிடாது. உண்மைகளுக்கே எப்போதும் மதிப்பு அதிகம். Facts matter!" இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்பி கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications