இந்து மதத்தின் பெயரால் ஓட்டு கேட்ட நிர்மலா சீதாராமன்.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க திமுக புகார்
சென்னை: சென்னையில் தனியார் தொலைகாட்சி சேனலின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத ரீதியில் பிரச்சாரம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். சென்னையில் சாணக்கியா தொலைக்காட்சி சேனலின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில் நிர்மலா இவ்வாறு பேசியிருந்தார். இந்த விழாவில் ஜி.கே. வாசன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் இந்த அரங்கில் பெரும்பான்மையாக அமர்ந்திருப்பவர்கள் இந்துக்கள்தான். ஆனால் நான் இந்து மதத்தையே அழிப்பேன் என கூறுவதும் அதை டெங்கு மலேரியாவுடன் ஒப்பிடுவதையும் என்ன சொல்வது. இந்த வார்த்தைக்காகவே நாம் சீற்றத்தை காட்ட வேண்டாமா? நம் கோயிலையே அழிக்கக் கூடிய, நம் கோயிலை சுரண்டி திண்ண கூடிய நம்ம மதத்தையே அழிப்பேனு சொல்ற கட்சிகளுக்கு எல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க.
தமிழக கோயில்: உத்தரகண்டில் செய்தது போல் தமிழகத்தில் கோயிலை சுரண்டி திண்பதை பிரதமர் மோடி கட்டுப்படுத்தக் கூடாதுனு ஏன் கேட்கறீங்க, உங்களுடைய ஒவ்வொரு வோட்டிலும் இருக்கிறது அந்த பவர்! யாருக்கு போடுறீங்க அந்த வோட்டுனு யோசித்து போடுங்க! என்றார்.
அவர் மேலும் பேசுகையில் பிரதமர் மோடி நம் நாடு முன்னேறனும் நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் என பாடுபடுகிறார். ஆனால் சிலர் அதை திசை திருப்பி விடுகிறார்கள். பிரதமரை திரும்ப திரும்ப கேள்வி கேட்கும் நிலையில் எதிர்க்கட்சிகளையும் கேள்வி கேளுங்கள்.
10 ஆண்டுகளில் ஊழல் இல்லை: 10 ஆண்டுகளில் ஒரு ஊழல் கூட இல்லை. பொறுப்போடு உள்ள ஒரு கட்சியாக இருந்தால் கீழ்த்தனமாக பேசுவோமா, எந்த மதத்தை ஆதரிக்கிறீங்க, எதை அழிக்க போறீங்க. எல்லா மதத்தையும் ஒழிக்க வேண்டும் என சொல்லுங்க பார்ப்போம். ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி ஆளுமைக்கு வரவே கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம்.
தமிழகத்தில் அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு ஓட்டு போட போகிறோம் என்பதுதான் முக்கியம். போதை பொருட்கள் அதிகம் பரவியிருக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஓட்டு போடுவீர்களா என நிர்மலா கேட்ட போது, அங்கிருந்த பார்வையாளர்கள் போட மாட்டோம் என கனத்த குரலில் தெரிவித்தனர்.
தமிழகத்திற்கு கெட்ட பெயர்: இதையடுத்து நிர்மலா தொடர்கையில், எந்த ஆட்சியில் தமிழகத்திற்கு கெட்ட பெயர் வந்துள்ளதோ அந்த ஆட்சியை அகற்ற வேண்டும். பொறுப்புள்ள கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் நாட்டிற்கு முன்னேற்றம் கிடைக்கும். எதிர்க்கட்சிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன செய்துள்ளார்கள்.
பிரதமர் மோடி தமிழை பற்றி பேசா இடமே இல்லை. தமிழகத்தை முன்னேற்ற மத்திய அரசு நல்ல அரசு அமைய பாஜகவுக்கு வாக்களியுங்கள். ஆன்மீகத்தையும் தேசியத்தையும் வளர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள். நாடு முன்னேற ஒவ்வொருவரும் ஓட்டு கேளுங்கள்.
எப்போதும் இன்னொருத்தர் போட்ட பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை. வெள்ள பாதிப்பா இந்தா ஆயிரம் ரூபாய், வீடு இடிந்து போய்விட்டதா, இந்தா 500 ரூபாய், என சில கட்சிகள் மக்களை டீல் செய்கின்றன. இந்த கட்சிகள் ஆட்சியில் இருந்தால் நாடு முன்னேறாது. தொலைநோக்கு பார்வை வேண்டும். அரசை நடத்த வேண்டிய வலிமை இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணைய விதிகள்: தேர்தல் தேதியை நேற்றைய தினம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விளக்கி பேசினார். அதில் அரசியல் கட்சிகளும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது. நட்சத்திர பேச்சாளர்களும் நாகரீகமாக பேச வேண்டும். சிவப்பு கோட்டை எப்போதும் தாண்டவே கூடாது. ஜாதி, மத ரீதியில் பேசக் கூடாது, யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது என தெரிவித்திருந்தார்.
திமுக புகார்: ஆனால் தேர்தல் ஆணைய விதிகளை மீறும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். இதனால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்மலா பேசிய வீடியோவுடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் சென்றுள்ளன.












Click it and Unblock the Notifications