திமுகவை எதிரின்னு சொன்ன காமராஜர் பெயரிலேயே நூலகம் திறக்குறோம் பார்த்தீங்களா- கரு பழனியப்பன்
சென்னை: தமிழக வெற்றிக் கழகக் கட்சிக்காரர்களை சந்திக்க முதலில் வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டும் என்று இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். திமுக மட்டுமே தனது ஒரே எதிரி என்று முதல்முதலில் சொன்னது காமராசர் என்று கூறிய கரு.பழனியப்பன், அவரின் பெயரையே நூலகத்திற்கு வைத்து மகிழ்ச்சியடைவது திமுக மட்டும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளாகவே திமுகவுக்காக பணியாற்றி வருகிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட கரு.பழனியப்பன், அதன்பின் திமுக மேடைகளிலேயே தோன்றினார். இதன்பின் கலைஞர் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த அவர், தற்போது திமுகவின் முக்கிய பேச்சாளராக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் சூரிய மகன் 2025 என்ற தலைப்பு திமுக சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில், சினிமாவில் இனி நடிக்க மாட்டேன் என்று சொன்னவர்கள் அனைவரும் மீண்டும் நடிக்க வந்துவிட்டார்கள்.. அப்படி விஜயும் மீண்டும் நடிக்க வந்துவிடுவார்.
திருச்சியில் மிகப்பெரிய நூலகம் கட்டி, அந்த நூலகத்திற்கு காமராசரின் பெயரை வைப்பேன் என்று அறிவித்த போது மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் திமுக ஆட்சியில் நூலகம் கட்டப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் நூலகம் கட்டி அந்த நூலகத்திற்கு அண்ணாவின் பெயரை வைத்துவிட்டோம். அதன்பின் மதுரையில் நூலகம் கட்டி கருணாநிதி பெயரினை வைத்துவிட்டோம்.
கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைக்கப்படவுள்ளது. 3 பெரும் திராவிடத் தலைவர்களின் பெயரினை வைத்தாகிவிட்டது. 4வதாக யார் பெயரை வைக்க வேண்டும்? வேறு திராவிடத் தலைவர்களே இல்லையா என்ன.. நாம் எதற்காக காமராசர் பெயரினை வைக்க வேண்டும். அண்மையில் விஜய் பேசும் போது திமுகவுக்கு தவெகவுக்கும் தான் போட்டி என்று சொன்னார் அல்லவா..
அதனை முதல்முறையாக சொன்னதே காமராசர்தான்.. 1958ல் சட்டசபையில் எங்களின் ஒரே எதிரி திமுகதான் என்று காமராசர் கூறினார். யார் நம்மை எதிரி என்று கூறினார்களோ, அவர்களின் பெயரையும் நூலகத்திற்கு வைத்து மகிழ்ச்சியடையும் கட்சிதான் திமுக. யாரெல்லாம் திமுகவை எதிரி என்று சொன்னார்களோ, அவர்களை வரிசையாக 75 ஆண்டுகளாக திமுக சந்தித்து வருகிறது.
அண்மையில் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க சென்ற போது 150க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அவருடன் இருந்தனர். ஆனால் சமீபத்தில் விஜய், என் கட்சியினரை சந்திக்க முடியவில்லை. அதற்கு தடையாக சிலர் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.. அதற்கு முதலில் விஜய் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்.. அவ்வளவு பெரிய சுவரை கட்டி இருந்தால், கட்சிக்காரன் எப்படி வந்து பார்ப்பான் என்று விளாசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications