''கட்சிக்கு அவப்பெயர்''! குடியாத்தம் குமரனை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்த துரைமுருகன்!
சென்னை: திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து மீண்டும் கட்டம் கட்டியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

குடியாத்தம் குமரனை திமுகவிலிருந்து அமைச்சர் துரைமுருகன் நீக்குவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை நீக்கப்பட்டு ஆ.ராசா மூலம் மீண்டும் கட்சிக்குள் வந்தார் குடியாத்தம் குமரன். இந்நிலையில் இப்போது மீண்டும் அவரை 2வது முறையாக கட்சியை விட்டு வெளியேற்றி இருக்கிறார் துரைமுருகன்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை பூர்வீகமாக கொண்ட குமரன் தனது மாணவப் பருவத்தில் இருந்து திமுக மேடைகளில் முழங்கி வருகிறார். தொடக்கத்தில் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், ஒரு கட்டத்தில் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறினார். துரைமுருகன் குறித்து தனக்கு நெருக்கமானவர் ஒருவரிடம் குடியாத்தம் குமரன் பேசியதை ரெக்கார்டு செய்த அவர் அதை அப்படியே துரைமுருகனிடம் ஓலிக்கவிட்டு காட்டியிருக்கிறார்.
இதையடுத்து கடந்த 2019ஆம் செப்டம்பர் மாதம் திமுகவிலிருந்து குடியாத்தம் குமரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பல மாதங்களாக அவர் மீண்டும் திமுகவில் இணைய பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்காததால் ஆ.ராசாவின் உதவியை நாடினார். ஆ.ராசாவை பொறுத்தவரை சொற்பொழிவாளர்களை கைவிடாதவர் என்பதால் திமுக தலைமையிடம் பேசி மீண்டும் குடியாத்தம் குமரனை கட்சிக்குள் கொண்டு வந்ததோடு, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியையும் பரிந்துரைத்து பெற்றுக்கொடுத்தார்.
இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் எதிர்கட்சிகளுக்கு சற்று காட்டமான முறையில் அண்மைக்காலங்களாக பதிலடிகளை கொடுத்து வந்தார் குடியாத்தம் குமரன். இந்நிலையில் மீண்டும் என்ன நடந்ததோ தெரியவில்லை, இன்று இரண்டாவது முறையாக குடியாத்தம் குமரனை கட்சியிலிருந்து கட்டம் கட்டியிருக்கிறார் அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன். இது திமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications