திமுக பொதுக்குழு சுவாரஸ்யம்... துரைமுருகனுக்கு 218 பேர்.. டி.ஆர். பாலுவுக்கு 125 பேர்..!
சென்னை: திமுக பொதுக்குழுவில் துரைமுருகன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என 218 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.
இதேபோல் டி.ஆர்.பாலு திமுக பொருளாளராக வர வேண்டும் என 125 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் அவரை ஆதரித்திருக்கின்றனர்.
இந்த தகவலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு மேடையில் அறிவித்ததோடு அவர்கள் இருவரையும் எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை எனக் கூறினார்.

உணர்ச்சி பொங்க
திமுக பொதுக்குழு இன்று காலை சரியாக 10 மணிக்கு தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்பதற்காக 9.40 மணிக்கெல்லாம் துரைமுருகன் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கிற்கு வருகை தந்தார். காரில் இருந்து இறங்கிய அவரிடம் வழக்கமான குறும்பு சிரிப்பு இல்லை. முகத்தை மிகவும் உணர்ச்சிப் பொங்க வைத்திருந்த அவர் தனது மகன் கதிர் ஆனந்த் எம்.பி. சகிதம் பொதுக்குழு அரங்கிற்குள் நுழைந்தார். அவரை மேடையில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார் பூச்சி முருகன்.

இருவரும் பேச்சு
துரைமுருகன் வருகை தருவதற்கு முன்பாகவே அண்ணா அறிவாலயம் வந்த டி.ஆர்.பாலு ஏற்கனவே அந்த அறையில் அமர்ந்திருந்தார். இருவரும் மிகவும் உணர்ச்சிப் பொங்க பேசிக்கொண்டிருந்தனர். மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கிற்கு வந்த தகவலறிந்து அவர்கள் இருவரும் வணக்கம் தெரிவித்து வரவேற்க முயன்றனர். ஆனால் அவர்கள் இருவரையும் அறைக்குள் இருக்குமாறும் தலைவர் உங்கள் பெயரை குறிப்பிட்டவுடன் வந்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டாலின் அறிவிப்பு
திமுக பொதுக்குழு வரவேற்பு உரை ஆற்றிய ஆர்.எஸ்.பாரதி புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு விவகாரம் பற்றி தலைவர் அறிவிப்பார் என தனது உரையை முடித்துக்கொண்டார். இதையடுத்து மைக் பிடித்த ஸ்டாலின் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் வர வேண்டும் என 218 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் இருக்கிறார்கள். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால் பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவும் துரைமுருகன் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.

சால்வை அணிவித்து
இதையடுத்து அறையில் இருந்து நெகிழ்ச்சியுடன் மேடைக்கு வந்த துரைமுருகன் ஸ்டாலின் அணிவித்த சால்வையை ஏற்றுக்கொண்டு உருக்கமுடன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சைகையில் நன்றி தெரிவித்தார். இதேபோல் அடுத்ததாக டி.ஆர். பாலு பொருளாளராக வர வேண்டும் 125 பேர் முன் மொழிந்தும் வழிமொழிந்தும் உள்ளதாக கூறிய ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அவர்கள் இருவரையும் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு இரண்டு புறமும் கே.என்.நேரு அழைத்துச்சென்று அமரவைத்தார்.












Click it and Unblock the Notifications