பொய் சொல்லிவிட்டு முதல்வர் ஏன் வெளிநாடு போகனும்...? மு.க.ஸ்டாலின் கேள்வி
Recommended Video
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் முதலீடுகளை ஈர்க்கப்போகிறோம் என ஏன் பொய் சொல்லிவிட்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மணவிழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார். ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பே அரசு செலவில் உலகநாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சரும், அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாக கூறினார். போகட்டும், வேண்டாம் என்று தாம் சொல்லவில்லை என்றும், முதலீடுகளை ஈர்க்கப் போகிறோம் என ஏன் பொய் சொல்ல வேண்டும் என்பது தான் தமது கேள்வி எனவும் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தானும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், ஆனால் மெட்ரோ ரயில் உள்ளிட்ட சில ஆய்வு பணிகளுக்காகவே தான் சென்றதாகவும், முதலீடுகளை பெறப்போகிறேன் என தாம் எந்த இடத்திலும் பொய் சொல்லிவிட்டு செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்காலத்தில் முதலீடுகள் தமிழகத்தை தேடி வந்ததாகவும், அதற்கு சாட்சியே அம்பத்தூர் முதல் ஸ்ரீ பெரும்புத்தூர் வரையிலான தொழிற்சாலைகள் எனவும், அதிமுக அரசு முதலீடு விவகாரத்தில் நாடகம் நடத்திக்கொண்டிருப்பதாகவும் சாடினார்.