உணர்வுத் தீயை ஊதி அணைக்கலாம் என தப்புக் கணக்கு... மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை அடக்குமுறையாலும், அரசு அதிகாரத்தை கொண்டும் ஒடுக்கலாம் என ஆட்சியாளர்கள் பகற்கனவு காணுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளைய தினம் ஓரணியாய் திரண்டு பேரணியில் பங்கேற்க வேண்டும் என திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ள விவரம் பின்வருமாறு;

கொடூரச்சட்டம்
மதச்சார்பற்ற தன்மையை மாய்த்திடும் வகையிலும், மதரீதியாக வெறுப்பை விதைத்து, பிளவுபடுத்தும் முறையிலும் மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்திய மக்களை மதம் எனும் கோடரியால் பிளக்கின்ற இந்த கொடூரச் சட்டத்திற்கு, தமிழ்நாட்டை ஆளுகின்ற அ.தி.மு.க. ஆதரவளித்துள்ளது.

சர்வாதிகாரம்
மாணவர்களின் தீரமும் எழுச்சியும் மிகுந்த போராட் டம் தீவிரமடைந்து வருகிறது. சர்வாதிகார மனப்பான்மை கொண்ட ஆட்சியாளர்களோ, அடக்குமுறையால் இவற்றை ஒடுக்கிவிடலாம் என பகற்கனவு காண்கிறார்கள். குடிமக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது தேசவிரோதமாம். அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், அவர்களை ஒடுக்க 144 தடையுத்தரவை நடைமுறைப் படுத்துவதும் தேச நேய நடவடிக்கையாம்.

உணர்வுத்தீ
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய தொல்.திருமாவளவன், நடிகர் சித்தார்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்தல்களாலும் ,வழக்குகளாலும் மக்களின் உணர்வுத்தீயை ஊதி அணைத்துவிடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்கள்.

நாடும், ஏடும்
ஜனநாயக சக்திகள் ஒருமித்து நிற்கும் போது, அரசதிகாரமும் அத்துமீறல்களும் அடக்குமுறைகளும் ஏதும் செய்ய முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடம். மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. என்ன சொல்கிறதோ அதுதான் இன்றைய அ.தி.மு.க.வின் கொள்கை, கட்டளை, என்பது நாடும் ஏடும் அறிந்த ரகசியம்.

மதநல்லிணக்கம்
மதநல்லிணக்கத்தைப் போற்றும் தமிழ்நாட்டில், மதவெறி சக்திகளுக்கும் அவற்றுக்குத் துணை நின்று சேவகம் செய்வோருக்கும் தமிழக மக்கள் இடமளித்ததில்லை. அந்த உணர்வுடன், டிசம்பர் 23 அன்று குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி, கட்சி எல்லைகளைக் கடந்து நடைபெறுகிறது.

அதிரட்டும்
கட்சி எல்லைகளுக்கு அப்பால் ஓரணியாகத் திரண்டு, மக்களின் பேரலை போன்ற பேரணியால் டிசம்பர் 23 அன்று சென்னை குலுங்கட்டும்; அது கண்டு டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உள்ளிட்டோரின் உரிமைகள் மீட்சி பெறட்டும்!
மேற்கண்டவாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications