வீணாக அமைச்சர் ஜெயக்குமார் தலையிட வேண்டாம்... திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சாடல்
சென்னை: அனைத்துத் துறை பிரச்சினைகளிலும் அமைச்சர் ஜெயக்குமார் வீணாக தலையிட வேண்டாம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை மற்றும் பணியாளர் துறை பற்றியே இன்னும் ஜெயக்குமாருக்கு முழுமையாகத் தெரியாது இளங்கோவன் எம்.பி. சாடியுள்ளார்.
இதனிடையே இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

போலி நாடகம்
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், தன்னை ஏதோ 'ஆக்டிங் சீஃப் மினிஸ்டர்' போல் நினைத்துக் கொண்டு, அனைத்துத் துறைகள் சார்ந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வது, அவசரமாக அரிதாரம் பூசிய மோகத்தில் போடும் போலி நாடகம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இலக்கணம்
நாகரீகமான பேச்சுக்கும், நயமான வார்த்தைகளுக்கும், நாட்டுக்கே இலக்கணமாகத் திகழும் எங்கள் கழகத் தலைவரை பார்த்து, 'தரக்குறைவான முறையில் விமர்சனம் செய்கிறார்' என்று, அமைச்சர் பச்சைப் பொய் கூறுவது, அ.தி.மு.க.அரசின் 'வெற்று அறிவிப்புகளிலும்', 'வெட்டியான விளம்பரங்களிலும்', உள்ள பொய்யும் புரட்டும் போலவே இருக்கிறது.

இரட்டை வேடம்
நீட் தேர்வு அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகத்திற்குள் நுழைந்தது என்பதை இன்றுவரை மறுக்க இயலவில்லை. உதய் திட்டம், ஜி.எஸ்.டி. சட்டம், முத்தலாக் போன்ற பல்வேறு, மாநில உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து விட்டு, பிறகு ஆதரித்த 'இரட்டை வேடத்திற்கு' இதுவரை பதில் இல்லை. இவை எதற்கும் முதலமைச்சர் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

அரிச்சுவடி தெரியாது
ஆனால் இவற்றுக்கு எல்லாம் தனக்கு மட்டுமே பதில் தெரியும் என்பது போல், ஜெயக்குமார் அவர்கள் பேசுவதும், காவிரி நடுவர் மன்றம், முல்லை பெரியாறு விவகாரங்களின் அரிச்சுவடி கூட ஜெயக்குமார் அவர்களுக்குத் தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.












Click it and Unblock the Notifications